சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (51). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டிற்குக் குடியேறினார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.15 லட்சம் ரூபாய் வரை இழந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய மகள் மற்றும் மகனுக்கு ''இதுவே என்னுடைய இறுதி நாள்'' எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த தகவலைப் பார்த்த மகன் உடனடியாக எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து தந்தையைப் பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாகத் தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது. பின்னர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டு சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்து மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது. மேலும், தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.