சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை
கடலூர், மே 24 - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தமன் (48), கொத்தனார். இவர் கடந்த 21.10.2012 அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உத்தமனைக் கைது செய்தனர். இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிபதி குலசேகரன் தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உத்தமனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.
நெல் கொள்முதலுக்கான பணம் வழங்குவதில் தாமதம்
திருவண்ணாமலை,மே 24 - செய்யாறு தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணம் 60 நாட்கள் கடந்தும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. தனியார் மண்டியில் நெல் விற்பனையில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அரசு தொடங்கிய நேரடி கொள்முதல் நிலையங்களில் பணம் பெறுவதற்கு விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. கோரிக்கை மனு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் அருண்குமார், செய்யாறு தாலுகா செயலாளர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு
கடலூர், மே 24 - கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய, தென் கொங்கன் கடற்கரையில் காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
செஞ்சி, மே 24 - மேல்மலையனூர் அருகே சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மற்றும் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கப்ளாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சதீஷ் (27). இவருக்கும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 15.9.2024 அன்று கோவிலில் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இது பற்றித் தகவல் அறிந்ததும் மகளிர் ஊர்நல அலுவலர் மலர்கொடி, கப்ளாம்பாடி கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 18 வயது நிறைவடையாத சிறுமிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது, அவர் கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது இது குறித்து அவர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வாலிபர் சதீஷ், அவரது தந்தை வெங்கடேசன், தாய் பூங்காவனம், உறவினர் யசோதா ஆகிய 4 பேர் மீதும் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக் கூடாது : ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம், மே 24 - விழுப்புரம் மாவட்டத்தில் கட்டிட கழிவு களை நீர்நிலைகளில் கொட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் செயல்பாடுகளை அதி கரிக்க மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கிப் பேசினார். மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து, மறுசுழற்சி செய்யக் கூடியவற்றைச் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத கழிவuகளை முறையாக அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. தன்னார்வலர்கள் வாரத்திற்கு ஒரு முறை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வரும் கழிவுகளைத் தரம் பிரித்து, பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டக் கூடாது. நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்கக் கருவேல மரங்களை அகற்றும் திட்டம் மேற்கொள்ளப்படும்.கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா, உதவித் திட்ட அலுவலர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.