சென்னை:
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவைமத்திய அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.இந்திய நாட்டின் நவரத்தினங்களில் ஒன்றான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை மத்திய பாஜக அரசு தனியாருக்கு தாரைவார்க்கிறது. இதற்கு ஊழியர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல கட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அரசியல்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களை சந்தித்து தங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.அதனடிப்படையில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சென்னையில் சந்தித்தனர். சங்கத்தின் தலைவர்கள் ஹயாத் பாஷா, சிவப்பிரியா, சுஜாதா, முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.இதனைத் தொடர்ந்து, ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.