வடலூரில் வள்ளலார் தர்மசாலையின் அணையா அடுப்பின் 159 வது ஆண்டு விழா
கடலூர், மே 25- வடலூரில் வள்ளலார் நிறுவிய தர்மசாலையின் அணையா அடுப்பின் 159- வது ஆண்டு விழா நடைபெற்றது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியாற்றி வரும் வள்ளலார் ஏற்படுத்திய அணையா அடுப்பின் 159 ஆவது ஆண்டை முன்னிட்டு சத்திய தர்மச்சாலையில் சன்மார்க்க கொடி யேற்றப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். கடந்த 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11ஆம் தேதி வள்ளலார் பொதுமக்களின் பசியை தீர்க்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தார். அன்று வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு இன்றுவரை அணையாமல் நாள்தோறும் மூன்று வேலையும் பல்லா யிரக்கணக்கான மக்களின் பசியை தீர்த்து வருகிறது. இந்த நிலையில் வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பின் 159 ஆவது ஆண்டு துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய தர்மச்சாலையில் நடைபெற்றது. வள்ளலார் சத்திய தர்மசாலை முன்பு உள்ள கொடிமரத்தில் மஞ்சள் வெள்ளை வர்ணம் பொருந்திய சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்று வள்ளல் பெருமானை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பில் உணவு தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.