tamilnadu

img

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுக...தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு... டிச.4 முதல் இடதுசாரிக் கட்சிகள் தமிழகத்தில் தொடர் மறியல்...

சென்னை:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு  இடதுசாரிக்கட்சிகள் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) மாநிலச் செயலாளர் என்.கே. நடராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:மத்திய பாஜக அரசு கொரோனா தொற்றுப் பரவல் காலத்தைப் பயன்படுத்தி  அவசர கோலத்தில் ஜனநாயகவிரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

வரலாற்றில் இல்லாத அளவு லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சென்று தில்லியில் முகாமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களையும், மின்சாரசட்டத்திருத்த முன்வடிவையும் திரும்பப்பெறக் கோரி நடைபெறும் நியாயமான எழுச்சிமிக்க போராட்டத்தினை இடதுசாரி கட்சிகள் ஆதரிப்பதோடு அவர்களோடு இணைந்து களத்தில் நின்று  போராடி வருகின்றனர்.
போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தீர்வு காண்பதற்கு மாறாக, மோடி அரசு, 

விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தில்லி நகரத்திற்குள் நுழைய விடாமல் பாஜக அரசின்  காவல்துறையும், துணை ராணுவப்படையும் தொடுக்கும் தாக்குதல்களையும், தடைகளையும் எதிர்கொண்டு விவசாயிகள் தில்லியைச் சுற்றி முகாமிட்டு போராடி வருகின்றனர். விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் சிதைக்கும் வகையிலும்,  விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் வகையிலும், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி பெருமுதலாளிகளிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிறு-குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தினை இழக்க வழிவகுக்கும் வகையிலும், கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களையும், மின்சாரத்தையும், மின்விநியோகத்தையும் தனியார் கொள்ளை லாபத்திற்கு அனுமதிக்கும் மின்சார திருத்தச்சட்ட முன்வடிவினையும் மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.

தமிழக விவசாயிகளுக்கு அதிமுக அரசின் துரோகம்
மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை, விவசாயம் மாநிலபட்டியலில் உள்ள ஒன்று என்பதைபற்றி கூட கிஞ்சித்தும் கவலைப்படா மல், அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஆதரித்துள்ளது மட்டுமின்றி, உடனடியாக தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்றி தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாபெரும்துரோகத்தினை இழைத்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் பேரெழுச்சி மிக்க போராட்டத்திற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையிலும், போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் 2020 டிசம்பர் 4 ஆம் தேதி  முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங் களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல்போராட்டம் நடத்துவது எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் -லிபரேசன்)  ஆகிய இடதுசாரிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இந்த இயக்கத்தில் தமிழக விவ சாய பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் பெருந்திரளாக பங்கேற்று தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;