tamilnadu

img

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்...

சென்னை:
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதைத் தடுத்து நிறுத்தி அரசுஆணைப்படி கட்டணமில்லா மருத்துவசிகிச்சையை வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

 தமிழக அரசு, ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்குப் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.180/- அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது. 2016 முதல் 2020 முடிய நான்கு ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சம் வரை எனவும், குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7½ லட்சம் வரை வழங்கப்படும் எனவும் ஆணையிடப்பட்டது.

 தற்போது அரசாணை எண்:279ன் படி 01.07.2020 முதல் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் ஓராண்டுக்க்குத் தொடர்வதாகவும், இத்திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இணைக்கப்பட்டும் ஆணையிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் தமிழக அரசின் மேற்கண்ட புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்தும் ஒப்பந்தத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் துணைஒப்பந்த அடிப்படையில் (Sub Contract) எம்.டி. இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களின் சார்பில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மாநிலஅளவிலும், மாவட்ட அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்தை மேற்பார்வையிட தமிழக அரசின் சார்பில் மாநில கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் ஒரு இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெறும்போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் வழங்குவதில்லை. சிகிச்சைக்கான அதிகபட்ச தொகையாக ரூ.4 லட்சம் வரையும் சில சிகிச்சைகளுக்கு ரூ.7.5 லட்சம் வரை வழங்கலாம் என்று அரசாணை இருக்கும் போது காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25% முதல்  50% வரை மட்டும் வழங்குவது என்ற நடைமுறையைக் கடைப்பிடித்து ருகின்றது.இச்சூழலில் மருத்துவமனை காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போக மீதிப் பணத்தை நோயாளிகளைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது, கொரோனா நோய்க்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுப்பது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் ஈடுபடுகின்றன.மேற்கண்ட பிரச்சனைகளை காப்பீட்டு நிறுவனங்களின் மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் கொண்டு சென்றால் அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை. மேலும், இதுதொடர்பாக கருவூலக் கணக்குத்துறையின் இணை இயக்குநரின் கவனத்திற்குக் கொண்டு சென்றால் “உங்களுக்கு உதவி செய்ய முடியாது” என்ற பதில் கூறுகிறார்.

தமிழக அரசின் உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்திட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;