tamilnadu

img

நிவர் புயல்-கனமழையால் பாதிப்பு.... போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை செய்திடுக.. சிபிஎம்

சென்னை:
தமிழகத்தில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகஅரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை செய்திட வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர்  26 அன்று புதுச்சேரிக்கு 30 கிலோமீட்டர் வடக்கில் நிவர் புயல் கரையைக் கடந்தது. புயலுக்கு முன்பும், பின்பும் பெய்த பெருமழையாலும், புயலாலும் பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக புயல் வலுவிழந்து அச்சப்பட்ட அளவிற்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.

வீடுகளுக்குள் புகுந்த மழைவெள்ளம்
புயல் கடந்த மரக்காணம் பகுதி அல்லாமல் புதுச்சேரி, கடலூர், சென்னை, செங்கல்பட்டு,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாழாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் வாழை, செங்கரும்பு உள்ளிட்டு பல பயிர்கள் வெள்ளத்தால் நாசமடைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நெற்பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி அழுகிவிட்டன. வெள்ளாற்றில் நீர் பெருக் கெடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கடலோர பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பலபகுதிகளில் வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள், மின்கம்பங்கள் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டின் கனமழை, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு நிவர் புயலால் பாதிப்பு இல்லையென்றாலும், சென்னையில் தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவான்மியூர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்டு சென்னை மாநகரத்தில் பலபகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் சூழ்ந்து மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பல ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மின் சாதனங்கள் நாசமாகியுள்ளன. நிவர் புய
லால் மட்டுமல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை மாநகரத்திலும் மற்ற பிற பகுதிகளிலும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாவது தொடர் கதையாக உள்ளது. அறிவியல்பூர்வமான நகர்ப்புற திட்டமிடாததே  இதற்கு முக்கிய காரணம்.

விவசாயிகள்-மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குக!
வெள்ளம் வடிவதற்கான கட்டமைப்பும், பாதாளச் சாக்கடை கட்டமைப்பும் சரியாக இல்லாத காரணத்தினால் வெள்ளக் காலங்களில்இரண்டும் கலந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் இது ஏற்பட்டாலும் சரிசெய்வதற்கான முறையில் மாநில அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.

@    கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயலால் சாய்ந்த மற்றும்நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்களுக்கு மாநிலஅரசு கணக்கெடுப்பு நடத்தி, பாதிப்புகளுக்கேற்ற அளவு  உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்திடவேண்டும்.

@   வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்த பகுதிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநில அரசாங்கம் வீடுகள் கட்டிக் கொள்ளும் அளவிற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

@   சாய்ந்த மின்கம்பங்களை நிறுவுவதோடு, சாலைகள் பராமரிப்பையும் விரைந்து மாநில அரசு செய்திட வேண்டும்.

@ இக்காலத்தில் மீன்பிடிக்கச் செல்ல இயலாத மீனவர் குடும்பங்களுக்கும், வேலையிழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் மாநில அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்.

@ வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து ஏற்பட்ட சேதாரங்களையும் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

நிவர் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மத்திய அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். மாநில அரசும் வலியுறுத்திட வேண்டும். மாநில அரசு தேவையான அளவிற்கு நிதிஒதுக்கீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்துசெய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;