tamilnadu

img

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாகத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய  ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இதுவரை 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இதனால் கடந்தாண்டு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் ஆ.என்.ரவி ஒப்புதல் அளித்தார். பிறகு அக்டோபர் 19, 2022 இல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன்பின்னர் மசோதாவில் சில விளக்கங்கள் கேட்ட ஆளுநருக்கு 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதன்பின் 4 மாதங்கள் கழித்து மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பினார். சட்ட மசோதாவை இயற்றத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை எனக் காரணம் கூறினார் .

மீண்டும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி மீண்டும் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் தேதி சென்னை ராஜ்பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்” என்று பேசினார்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தியும், அரசின் தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது 

தற்போது சட்டபேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய சில மணி நேரத்திலேயே ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.