tamilnadu

img

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: பிரின்ஸ் கஜேந்திரபாபு வரவேற்பு  

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நிதியமைச்சர் மிகவும் உணர்ச்சி மிக்க உரையுடன் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார். ‌    

தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூல் கட்டணமில்லாமல் வழங்கப்படும்; பெண்கள் கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித்தொகை உள்ளிட்ட நல்ல அறிவிப்புகள் கொண்டுள்ளதை வரவேற்கிறோம்.    

மாதிரிப் பள்ளி, திறன் வளர்ச்சி, உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கு சிறந்த பயிற்சிகள் வழங்கக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில்‌ மாணவர்களுக்குப் பயிற்சி போன்ற அறிவிப்புகள் சமூகத்தில் ஏற்கனவே நிலவும் தவறான புரிதலை உறுதிப்படுத்தும். இது இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு ஏற்புடையதல்ல.    

இத்தகைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் கற்றல் செயல்பாட்டில் திறனும், ஆர்வமும் கொண்டவர்கள்; மற்றவர்கள் உயர் கல்வி செல்ல உரிய ஆர்வமும், போதிய கற்றல் திறனும் அற்றவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். கலைஞரின் சமச்சீர்க்கல்வி நோக்கம் அனைத்து குழந்தைகளும் பாகுபாடில்லாமல் நடத்தப் பட வேண்டும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்துவதே சுயமரியாதை இயக்கம் முன்வைத்த திராவிட மாதிரி.    

மேலும் அன்னியப் பல்கலைக்கழகங்கள் குறித்த அறிவிப்புகள் சர்வதேச நிதி மூலதனத்தின் இலாப வேட்டைக்கு உயர்கல்வித் துறையைத் திறந்துவிட வழிசெய்யும்.    

அதனைதொடர்ந்து நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து தாக்கலாக இருக்கும் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை கொள்கைக் குறிப்புகளிலாவது சமமான கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.