tamilnadu

img

மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புக... இளைஞர்கள் போராட்டம்...

சென்னை:
மின்வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை  நிரப்பக் கோரி இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் சார்பில் நவம்பர் 19 வியாழனன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் சொற்ப இடங்களை உள்முகத் தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம்பூர்த்தி செய்துவிட்டு 60 சதவீத காலிப்பணியிடங் களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில் 5000 கேங்மேன் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 15000 பேர் உடற்தகுதி தேர்வில் வெற்றிபெற்றனர்.  இவர்களுக்கான எழுத்து தேர்வில்  14949 பேர் கலந்துகொண்டனர். இந்த தேர்வு முடிவுகள் 2020 மே-22 அன்று வெளியிடப்பட்டது. இவர்கள் கடந்த ஆறுமாத காலமாக பணி நியமனத்துக்காக காத்துக்கொண்டு உள்ளனர்.கடந்த 2020 மார்ச் மாதம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்சார துறை அமைச்சர் கேங்மேன் பணிகளில் ஏற்கனவே இருக்கக்கூடிய 5,000 பணியாளர்களுடன் கூடுதலாக 5,000 பணியிடங்கள் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். ஆனால் இன்றுவரை ஒன்றைக்கூட தமிழக அரசு நிரப்பிடவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியே என  இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரி யத்தை தனியார்மயம் ஆக்கக்கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் நவம்பர்-19 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மதுரையில் மாவட்ட தலைவர் தோழர் கோபி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சேலத்தில் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்  மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார் சிறப்புரையாற்றினார். கோவையில் மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில இணைச்செயலாளர் சி.பாலசந்திரபோஸ்  சிறப்புரை யாற்றினார். மேலும், தமிழகம் முழுவதும் 40 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

;