tamilnadu

img

இறைச்சிக் கடைகளை மூடாதே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது Ex MLA மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுக்கும் அறிக்கை வருமாறு....

இறைச்சிக் கடைகளை மூடாதே! தமிழக அரசே தலையிடு

மக்கள் கூட்டத்தை காரணம்காட்டி சில மாவட்ட நிர்வாகங்கள் இறைச்சிக் கடைகளை வருகிற 14-ஆம் தேதி வரை மூடுவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு தலையிட்டு இந்த முடிவை கைவிடச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் நிலைக்கு செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. தமிழக அரசு அதற்காக உறுதியான சில நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதையும் பெரும்பான்மை மக்கள் அதற்கு ஆதரவாக செயல்படுவதையும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதை காரணம் காட்டி  சில ஒவ்வாத நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சில மாவட்ட நிர்வாகங்கள் இறைச்சிக் கடை நடத்துகிற  அமைப்புகளை அழைத்து இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். பல மாவட்டங்களில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இறைச்சி கடைகளை மூடுவதற்கான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்திருக்கின்றன.

இறைச்சி சாப்பிடுவது இந்த நோய்த் தொற்றுக்கு காரணமென்றால் அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் தமிழகத்தில் சில சக்திகள் இறைச்சி போன்றவை உண்பதால் தான் கொரோனா நோய்த்தொற்று பரவுவதாக சில தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். இதற்கு பின்னால் மிகப்பெரிய சதி அடங்கியிருக்கிறது. திட்டமிட்டு தமிழக மக்களை இறைச்சி  உண்பதிலிருந்து விலக்கி வைப்பதற்கான முயற்சியாக இந்த நடைமுறைகள் உள்ளதாக ஒரு அச்சம் நிலவுகிறது. புரதச்சத்து மிகுந்த இறைச்சி பொருட்கள்  நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வல்லமை கொண்டது. எந்த ஒரு நோய் தொற்றுக்கும் அதை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்திதான் ஒவ்வொரு மனிதனுடைய ஆதாரம். கொரோனா வைரசும் இன்றைக்கு இந்த அடிப்படையில்தான் உலகம் முழுவதும் எதிர் கொள்ளப்படுகிறது. நோய் தொற்றுக்குள்ளானவர்கள் வெற்றிகரமாக அதிலிருந்து விடுபடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியே ஆதாரம்  இந்த விஞ்ஞானத்தை மறுக்கிற விதமாக இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவுகள் அமைகின்றன. அத்தோடு மக்களின் உணவு உரிமையை கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. எனவே தமிழகத்தில் இருக்கிற பெரும்பான்மையான, சாதாரண மக்களின் அடிப்படையான நோய் எதிர்ப்பு ஆதாரமாக பருப்பு வகைகளோடு இறைச்சி தான் பிரதானமாக இருக்கிறது. இதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது. 

அதேநேரத்தில் இறைச்சிக் கடையின் முன்னால் மக்கள் கூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு தனிமனித இடைவெளியை உறுதி செய்வதற்கு, கடைக்காரர்களையும், நிர்வாகத்தையும் கட்டாயப்படுத்தி அமல்படுத்த வேண்டும். இன்றைக்கு பலசரக்கு, காய்கறி உட்பட கடைகளில் இந்த முறைதான் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறையை இறைச்சி கடைகளுக்கு உட்படுத்தி தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிற, நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமாக இருக்கிற இறைச்சி கடைகளை திறந்து நடத்துவதற்கு தமிழக அரசு நேரடியாக தலையிட்டு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

    நன்றி...