இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்
செவ்வாய் அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.
வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்
தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.
பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன்,
உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் தோழமைக்
கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிடுவது என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
மத்தியில் அமைந்துள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு
அனைத்து வகையிலும் மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. கார்ப்பரேட்
கொள்ளைக்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை
செயல்படுத்துவதிலும் முனைப்பாக இருக்கிறது. இதனால் நாட்டில் இதுவரை
சந்தித்திராத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இவைகளுக்கு
தீர்வு காண்பதற்கு மாறாக, மக்களை திசை திருப்பும் வகையில் மதவெறி நிகழ்ச்சி
நிரல் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மத்திய பாஜக அரசுக்கு அனைத்து வகையிலும்
பணிந்து சென்று தமிழகத்தின் நலனை காவு கொடுத்து வருகிறது. மத்திய அரசின்
நிர்ப்பந்தத்தால் பல்வேறு மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள்
விரோத திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ஊழல் இல்லாத
துறையே இல்லை என்றாகி விட்டது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து திமுக
மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்தும், சுயேச்சையாகவும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் ஊழலின் மொத்த
உருவமான அதிமுக அரசையும், அதோடு கூட்டணி சேர்ந்துள்ள பாஜக
அணியையும் வீழ்த்துகிற அரசியல் கடமையை நிறைவேற்றும் வகையில்,
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளோடு
தொகுதி உடன்பாடு கண்டு தேர்தலை எதிர்கொள்வது என மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்த்து
தமிழகத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு மகத்தான வெற்றி அளித்தது
போல், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவு
அளித்து மகத்தான வெற்றியை அளித்திட வேண்டுமென தமிழக மக்களை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகிறது.
உள்ளட்சித் தேர்தல் நடைமுறையை மாற்றியதற்கு கண்டனம்
இன்று (19.11.2019) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுவரையில்
நடைமுறையில் இருந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் நேரடி
தேர்தலை மாற்றி மறைமுக தேர்தலாக நடத்துவது என முடிவுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின்
இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது
வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்ட தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க தேவையான மக்கள்
ஆதரவு தங்களுக்கு இல்லை என்ற காரணத்தினாலும், இம்முறையினால்
அதிமுக அணி தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்ற
காரணத்தினாலும் தேர்தல் முறையையே மாற்றியமைக்க அதிமுக அரசு முடிவு
மேற்கொண்டுள்ளது. கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வகை
செய்வதின் மூலம் கவுன்சிலர்களை கடத்துவதற்கும், குதிரை பேரம்
செய்வதற்கும், தேர்தல் முடிவுகளை அதிகாரிகளைக் கொண்டு முறைகேடாக
அறிவிப்பதற்கும் வழி ஏற்படும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
எனவே, அதிமுக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும்,
மீண்டும் பழைய முறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள்
தேர்வை நேரடியாக நடத்திட வற்புறுத்தி அனைவரும் கண்டனக் குரல் எழுப்பிட
வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்திக்
கேட்டுக் கொள்கிறது.
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அதிமுக அரசு நடத்தாமல்
தள்ளிப்போட்டு வந்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் இறுதியாக டிசம்பர் 13ந்
தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டுமென
உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசு இந்த உத்தரவையும் மீறி தேர்தலை
மீண்டும் தள்ளி வைக்கும் வகையில் குழப்பமான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
தலைவர்களுக்கு நேரடி தேர்தலை மறைமுகமாக மாற்றியமைப்பது, மாநகராட்சி,
நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இடஒதுக்கீடு முறையை அறிவிக்காமல் காலம்
கடத்துவது, வார்டு மறுவரைகள் செய்யப்பட்ட இடங்களில் வந்துள்ள
முறையீடுகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்
தள்ளிப்போடுவது போன்றவைகள் மூலம் தேர்தலை எப்படியாவது நடத்தாமல்
தள்ளிப்போடும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
மூன்றாவது ஆட்சிமுறை எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை
நடத்தாமல் இருக்கும் அதிமுக அரசுக்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு வன்மையான
கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத
காரணத்தால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்து மக்களின் அடிப்படைத்
தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகம்
முழுவதும் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து டெங்கு, டைபாய்டு போன்ற விஷக்
காய்ச்சல்கள் அதிகரித்து மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும்,
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் மத்திய அரசின் மூலம் கிடைக்க
வேண்டிய சுமார் ரூ. 5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, உள்ளாட்சித் தேர்தலை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்
அனைத்து சட்டரீதியான பணிகளையும் நிறைவு செய்து 2019 டிசம்பர் 13ந்
தேதிக்குள் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை
நடத்திட வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழக அரசை
வலியுறுத்துகிறது.