tamilnadu

வேலூர் கோட்டை பயிற்சி மையத்தில் பெண் காவலர் தர்ணா

வேலூர், ஜூலை 2- சக காவலர் தாக்கியது குறித்து தெரிவித்த புகார்மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பயிற்சி பெண் காவலர், வேலூர் கோட்டையில் உள்ள பயிற்சி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். வேலூர் கோட்டையில் காவல்துறையினர் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 196 பெண் காவலர் கடந்த டிசம்பர் மாதம் முதல் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் ஒரு அறையில் 3 பேர்வீதம் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு பயிற்சி பெற்று வரும் மதுரையைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் அங்கு தங்கி இருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பீரித்தியை பெண் காவலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சிமைய அதிகாரிகளிடத்தில் பிரீத்தி புகார் செய்துள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பிரீத்தி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களும் வந்து புகார் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய புகார்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அவர் பயிற்சி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பயிற்சிமைய அதிகாரிகள் சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.