சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் புதிதாக ஒரு கிலோ மீட்டர் விரிவுப்படுத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசை சிபிஎம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு
வன விலங்கு காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிகப்படுத்த உச்சநீதிமன்றம் ஜூன் 3 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிக்குள் உள்ள கட்டமைப்புகள் குறித்து மூன்று மாத காலத்திறகுள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், புதிதாக நிரந்தரமான கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் புதிதாக ஒரு கிலோ மீட்டர் விரிவுப்படுத்தப்படுவதால் ஏற்கனவே அங்கு வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை கூட விரிவுப்படுத்தி கட்டிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். பட்டா நிலமாக இருந்தாலும் புதிய கட்டுமானங்களுக்கு இதன் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட யானைகள் காப்பகம், புலிகள் காப்பகம், வன விலங்கு காப்பகங்களுக்குட்பட்ட மாவட்ட மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை புதிதாக விரிவுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் ஏற்கனவே வசிக்கும் மக்களுக்கு விதிவிலக்கு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.