எஸ்எச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கைது செய்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டுத் தீர்வுகாண வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்.எச்.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 2024 ஜூன் மாதம் சிஐடியு தொழிற்சங்கத்தை அமைத்ததற்காக சங்கத்தின் 12 நிர்வாகிகளை எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் உடனடியாக நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. கடந்த 62 நாட்களாக தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுநாள் வரை சுமூகத் தீர்வு காண நிர்வாகம் முன்வரவில்லை.
12 நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் வேலை வழங்கக் கோரியும் பழிவாங்கல் நடவடிக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை சுமூக தீர்வு காண்பதற்கு மாறாக வெளி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளிகளை வைத்து நிர்வாகம் உற்பத்தியை எடுக்க முயற்சித்தது
சட்ட விரோத உற்பத்தியை எதிர்த்து கடந்த இரண்டு தினங்களாக ஆலைக்கு முன் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இன்று (ஆக.21) காஞ்சி மாவட்ட காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் தொழிற்சாலை அமைந்துள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் வி.சுமதி உட்பட 200க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வதுடன், சட்டவிரோத உற்பத்தியைத் தடை செய்யவும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவும் தமிழ்நாடு அரசு தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.