தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15, 16,17ல் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ‘தமிழ்ச் சமூகத்துடன் ஒரு பரந்த உரையாடலுக்கு, திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 15ல் துவங்கவுள்ள இந்த உரையாடல் தமிழகம் முழுவதும் மாணவர், இளைஞர், பெண்கள், தொழிலாளர், விவசாயிகள், விவசாய தொழிலாளர், ஊடகவியலாளர்கள், திரைத் துறையினர்... என அனைத்து தரப்பினரையும் தொடுவதாக அமையவுள்ளது. திண்ணைப் பிரச்சார வடிவில் நடைபெறவுள்ள இவ்வியக்கத்தின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து ஒரு கலந்துரையாடல் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றோரின் பகிர்வுகள் :
கே.சாமுவேல்ராஜ், பொதுச் செயலாளர், தீஒமு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2017 ஜூன் மாதம் நடத்திய சேலம் முதல் சென்னை வரையிலான நடைப்பயணம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக, சாதி வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களிடம் ஒரு வீதி உரை யாடலை அது நடத்தியது. அதே போன்று தமிழகம் பேசப் போகிற இன்னொரு நிகழ்வாக இந்த மாநிலம் தழுவிய பரந்த உரையாடல் அமையப் போகிறது. மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் ஒரு பகிர்வின் போது குறிப்பிட்டிருந்தார்: “சாதி நிலை பெற்றிருப்பதற்கு அச்சமும் ஒரு அடிப்படையாக உள்ளது. சுற்றத்தை பகைக்க முடியுமா? சாதி சனம் என்ன சொல்லும்?” இப்படி... சாதி அமைப்புகளின் இதழ்களை ஏன் வாங்குகிறீர்கள் என்றால் பலர் வரன் தேடுவதற்காக என்கிறார்கள். ஆனால் அந்த இதழ்களில் சாதிப் பெருமிதம் ஊட்டும் வரலாறு (?), கட்டுரைகளை, படித்த பலர், பேராசிரியர்கள் கூட எழுதுகிறார்கள். சாதி அவர்களோடு இடையறாது உரை யாடிக் கொண்டிருக்கும் போது அதன் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்தையே பாதிக்கிறது என்பதை பற்றிய உரையாடல் வேண்டாமா?
அ. குமரேசன், ஊடகவியலாளர்
உரையாடல்கள் பன்முகத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும். வரலாறுகள் பேசப்பட வேண்டும். வள்ளலார், வைகுண்டர், சித்தர்கள் என்ன பேசினார்கள் என்பதை பகிர வேண்டும். குறும் படங்கள் வாயிலாக உரையாடல்களை நடத்தலாம். ஊர், தொழி லரங்கம், வெவ்வேறு பிரிவினர் என நாம் சந்திப்பவர் களை பொறுத்து நம் வடிவம் அமையலாம்.
பேரா. ச.மாடசாமி
அறிவியல் இயக்க உரையாடல்கள் மிகப்பெரும் அனுபவங்களை தந்தது. நம்மை விட சாதாரண மக்கள் யதார்த்தத்தோடு உரையாடுவார்கள். கல்வியுடன் இணைந்த பிரச்சாரமாக இருக்க வேண்டும். விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய “மூதாய்” அத்தகைய கல்வியுடன் கூடிய உரையாடலுக்கு உதாரணம். மானுட வியல், சாதிக்கு எதிரான வெளிச்சத்தை தருவது. ஆனால் நமது கல்வி நிலையங்களில் மானுடவியல் பாடமாக இல்லை. “கற்கும் சமூகத்திடம் செல்” என்பது நமது இலக்காக இருக்க வேண்டும். உரையாடிய இடங்களில் நாம் தொடர்ச்சிக்கு எதையாவது, யாரையாவது விட்டு விட்டு வர வேண்டும். ரசிகர்மன்றக்காரர்களாக கூட இருக்கலாம். அவர்களை போன்றோர்தான் உள்ளூர் கல்வியாளர்கள். “சேர்ந்து வாழ்வோம்; சேர்ந்து வாசிப்போம்” என்பது போன்ற ஏற்கத்தக்க முழக்கங்களோடு நாம் செல்லலாம். பெண்கள் சிறந்த உரையாடல்களை நடத்து பவர்கள். “அழகுல பவளக்கொடி; வீட்டுல சாணிக் கூடை” என்ற சொலவடை உண்டு. அவர்களின் ஆற்றலை வெளிக் கொணர்ந்து பயன்படுத்த வேண்டும். ஒரே வகையிலான உரையாடல்கள் சாத்தியம் அல்ல. மக்களே வடிவத்தை தெரிவு செய்வார்கள்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்
அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிகளை நாம் பேசுகிறோம் என்ப தால் தயக்கம் தேவையில்லை. சமரசமின்றி சாதியை தகர்ப் போம் என உரக்க நம் எண்ணத்தை சொல்ல வேண்டும்.
சி.எம்.குமார், கவிஞர்
தமிழ் ஆயுதம் கையில் ஏந்த வேண்டும். பறைச்சி யாவதேதடா; பனத்தியாவதேதடா என்று பாடிய சித்தர்களின் குரல் கொண்டு உரையாட வேண்டும்.
ஆர்.இளங்கோவன் (டி.ஆர்.இ.யு)
காதல் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைப்போம். இளைய தலைமுறையை ஈர்ப்போம். சோஷலிச சிந்தனைகளும் இணைத்து பேசப்பட
வேண்டும். வீதி நாடகங்கள் வழியாகப் பேசலாம்.
பி.கே.ராஜன், பாரதி புத்தகாலயம்
பிற்பட்டோரின் பிரச்சனைகளும் இணைத்து பேசப்படலாம். போதனைகள், நெஞ்சைத் தொடுவது என்பதைக் கடந்து அவர்களின் வாழ்நிலைப் பிரச்சனைகளின் மீதான திரட்டலின் இணைப்பு புள்ளிகள் ஒருங்கிணைய வேண்டும்.
பி.சுகந்தி, மாதர் சங்கம்
பொது துண்டுப் பிரசுரம் மட்டுமல்லாது பகுதி வாரியான பிரச்சார பிரசுரங்களும் அவசியம். வட்ட மேசை விவாதங்களை நடத்தலாம். உரையாடப் போகிறவர்களிடம் முன் கூட்டியே நாம் உரையாட வேண்டும்.
அருட் தந்தை குமார்
எஸ்.வி.ராஜதுரை சொல்வது போல “நாலு பேர் சொல்வாங்க” என்கிற தயக்கம் குறி வைக்கப்பட வேண்டும். அந்த நாலு பேரை தனிமைப்படுத்தி மக்களை வென்றெடுக்கிற முயற்சியே. சாதி மறுப்பு திரு மணங்களை ஆதரிப்போம், அரவணைப்போம் என்ற உறுதிமொழி இளைஞர்களை ஈர்க்கும். சாதி ஒரு வறட்டு கௌரவம் என்பதை நமது பகிர்வுகள் எடுத்துரைக்க வேண்டும். இது ஓர் துவக்கமே. இது மாநாட்டுக்கு பின்னரும் புது புது வடிவங்களில் தொடர வேண்டும்.
கவின் மலர், ஊடகவியலாளர்
தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு எல்லா தரப்பினரிடமும் உரையாடுகிற வாய்ப்பு உள்ளது. நாம் பேசுகிற மொழி சாதாரண மக்களுக்கு உரியதாய் அமைய வேண்டும். “ கீழே போய் வேலை பார்க்க வேண்டும்” போன்ற சொல்லாடல்கள் மக்களை குறைத்து மதிப்பிடுவது ஆகும். எனக்கு அம்பேத்கர் ஒரு பேச்சுப் போட்டிக்கான வாசிப்பிலேயே அறிமுகமானார். அது போன்ற போட்டிகளை நடத்தலாம். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னணி செயல்பாட்டாளர்கள் க.சுவாமிநாதன், மோகனா, டி.செந்தில்குமார், கிருஷ்ண வேணி, செம்மல், பீமன், செல்வி(மாதர் சங்கம்) உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தனர்.
மு.கந்தசாமி, தீ.ஒ.மு
உயரிய பொறுப்பில் உள்ள தலித்துகளே அவர்களின் சாதி தெரிந்தவுடன் கீழ் மட்ட அதிகாரிகளின் முக திருப்பலுக்கு ஆளாகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடுவதில் தயக்கம் உள்ளது. வன்கொடுமை தடுப்பு அதிகாரிகளே “சுண்டு விரல் போனால் ஒரு லட்சம் கேட்பதா” என்று சாதிய வன்மத்தின் வலி தெரியாமல், சட்டம் தெரியாமல் பேசுகிறார்கள். நமது உரையாடல் இது
ஏ.டி. கண்ணன், மாணவர் சங்கம்
மாணவர்களிடம் உரையாட வேண்டும். கிராமங்களில் சாதி வேறுபாடின்றி ஒரே இடத்தில் பேதமின்றி உட்கார வைப்பது கடினமானது என்பது எங்கள் கள அனுபவம். அதற்காக பெரும் முயற்சி தேவைப்படலாம்.
ராஜு முருகன் திரைப்பட இயக்குநர்
நல்ல முயற்சி. நானும் உங்களோடு இணைவேன். திரைத் துறையினர் மத்தியில் ஓர் உரையாடலை முன்னெடுப்பேன். இளைஞர்கள் நம் உரையாடலில் அதிகம் பங்கேற்க வேண்டும். உரையாடலைத் தொடர்ந்து கே.சாமுவேல்ராஜ் தொகுத்து உரையாற்றினார். மொழி, காதல், அறிவியல், மானுடவியல், வரலாறு, பிற்பட்ட மக்களின் ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட இணைப்பு புள்ளிகள், கீழத் தஞ்சை அனுபவம், மொத்த சமூகத்தின் வளர்ச்சி, சோசலிச சிந்தனைகள் என பன்முக கோணங்களில் இருந்து ஆயிரமாயிரம் உரையாடல்கள் தமிழ் மண்ணில் ஒரு மாத காலம் நடைபெறும் என அவர் அறிவித்தார்.
இச் சந்திப்பிலேயே கருத்துக்கள், அணுகுமுறைகள், வடிவங்கள் பற்றிய மாறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட்டன. உரையாடல்களில் அவை இயல்பானவை. திறந்த மனதுடன், முற்றுப்புள்ளிகள் அற்ற உரையாடல்கள் சீரிய கருத்தாக்கத்திற்கு வழி வகுக்கும். எப்படி உரையாடலை நடத்துவது என்பதற்காக நடத்தப்பட்ட சந்திப்பே முதல் உரையாடலாக அமைந்தது என்ற உணர்வுடன் கலைந்தது அக் கூட்டம். அடுத்த ஒரு மாத்திற்குள்ளாக இன்னும் பல உரையாடல்களில் மக்களை சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு...
- தொகுப்பு: க.சுவாமிநாதன்