tamilnadu

img

காந்தியும், தமிழும்....

காந்திஜி கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சட்டப்படிப்புக்காக 1889-இல் லண்டனுக்குச் சென்றார். 1893-இல் சட்டக்கல்வியை முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்திய வர்த்தகர் ஒருவரின் வழக்கை நடத்துவதற்கு அழைப்பின்பேரில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தியிருந்த நிறவெறி பிரிட்டிஷ் ஆட்சி அங்கு வாழும் இந்தியர்களையும் அந்நாட்டின் கருப்பின மக்களையும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தியது. இதுகண்டு மனம் வருந்திய காந்திஜி ‘நேட்டால் இந்தியர் காங்கிரஸ்’ என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும்  நிறவெறிக்கும் எதிரா கப் போராடினார். ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதைத் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தின் கருத்து ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

1910-இல் காந்தி எல்லா இனத்தவருடனும் சேர்ந்து வாழும் கொள்கையைப் பெரிய அளவில் பரிசோதனை செய்துபார்க்க விரும்பினார். ஜோகன்ஸ்பர்க் அருகில் காலன்பர்க் என்பவர் 1100 ஏக்கர் நிலத்தை வாங்கி காந்தியின் செயல்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்காக இலவசமாக வழங்கினார். ஏராளமான  இந்தியக் குடும்பங்களும், காந்தியும் காலன்பர்க்கும் அங்குக் குடியேறினர். உலகப் புகழ்பெற்ற மிகச் சிறந்த ரஷ்ய நாவலாசிரியரும் சிந்தனையாளருமான டால்ஸ்டாய் பெயரில் “டால்ஸ்டாய் பண்ணை” என்று அதற்குச் சிறப்புப் பெயரிடப்பட்டது. சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஆண்கள் சிறைக்குச் சென்றபோது அந்த டால்ஸ்டாய் பண்ணை அவர்களின் குடும்பங்களுக்கெல்லாம் புகலிடமாக அமைந்தது. டால்ஸ்டாயின் அகிம்சை சிந்தனைதான் காந்திக்கு முதல் ஆதர்சமாக அமைந்தது.

இந்தியா திரும்பிய காந்திக்கு “மகாத்மா”என்ற உயர் கௌரவமிக்கப் பட்டத்தை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வழங்கினார். மகாத்மா என்பது எக்காலத்தும் காந்திஜியின் சிறப்பு அடையாளச் சொல்லாகும்!

இனி காந்திஜி தமது ‘சத்தியசோதனை’ சுயசரிதை மூலம் நமக்குக் கூறுகிறார்:

“ 1896-ஆம் ஆண்டின் மத்தியில் கல்கத்தாவுக்குச் சென்ற பொங்கோலோ என்ற கப்பலில் நான் (தென்னாப்பிரிக்காவிலிருந்து) தாய்நாட்டுக்குப் புறப்பட்டேன். கப்பலில் பிரயாணிகள் குறைவாகவே இருந்தனர். அவர்களில் இருவர் ஆங்கிலேய அதிகாரிகள். அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டாயிற்று. அவர்களில் ஒருவருடன் தினமும் ஒருமணி நேரம் சதுரங்கம் விளையாடுவேன். கப்பல் டாக்டர் எனக்கு ‘தமிழ் சுயபோதினி’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உருது மொழி தெரிந்திருப்பதும், சென்னை இந்தியருடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேட்டால் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

தமிழிலோ நல்ல அபிவிருத்தி அடைந்துவந்தேன். இதைச் சொல்லித்தர யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் ‘தமிழ் சுயபோதினி’ நன்றாக எழுதப்பட்ட புத்தகம். இன்னொருவர் உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. இந்தியாவுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு தொடர்ந்து படிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் அது சாத்தியமில்லாது போயிற்று. 1893-க்குப் பிறகு நான் அதிகமாகப் படித்ததெல்லாம் சிறையிலேதான். சிறைகளில் தமிழிலும் உருதுவிலும் எனக்குக் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கச் சிறைகளில் தமிழ் படித்தேன். உருது படித்தது ஏராவ்டா சிறையில். ஆனால், தமிழ் பேசக்  கற்றுக்கொள்ளவே இல்லை. நான் படித்த கொஞ்சம் தமிழும் பயிற்சி இன்மையால் மறதியாக ஆரம்பித்தது.
தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்துவருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த திராவிடர்கள் என் மீது பொழிந்த அன்பு, இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்துவருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர்கள் ஒருவரை நான் காணும்போது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர்களுடைய இனத்தினரான தமிழரும் தெலுங்கரும் காட்டிய விடாமுயற்சியையும்  தன்னலமற்ற தியாகத்தையும் நினைக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்து வாசனையே இல்லாதவர்கள்.

அவர்களின் பெண்களும் அப்படியே. இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே தென்னாப்பிரிக்கப் போராட்டம். எழுதப் படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர். ஏழைகளுக்காக நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப்பங்கும் வகித்தனர்.  என் நாட்டினரான அந்தக் கள்ளங் கபடமற்ற அந்த நல்ல மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதற்கு அவர்களுடைய மொழி எனக்குத் தெரியாதது ஓர் இடையூறாக இருந்ததே இல்லை. அரைகுறை ஹிந்துஸ்தானியோ, அரைகுறை ஆங்கிலமோ அவர்கள் பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள் வேலைகளைச் செய்துகொண்டு போவதில் எங்களுக்குக் கஷ்டமே தோன்றியதில்லை. ஆனால், அவர்கள் எங்களிடம் காட்டிய அன்புக்கு நன்றியறிதலாகத்  தமிழும் தெலுங்கும் கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று விரும்பினேன். முன்பே நான் கூறியதுபோல் தமிழ்க் கல்வியில் கொஞ்சம் அபிவிருத்தி அடைந்திருந்தேன். தமிழிலோ நல்ல அபிவிருத்தி அடைந்துவந்தேன். இதைச் சொல்லிக் கொடுக்க யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், ‘தமிழ் சுயபோதினி’ நன்றாக எழுதப்பட்ட புத்தகம். இன்னொருவர் உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

டால்ஸ்டாய் பள்ளியில்...
(தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பள்ளியில்)  “இலக்கியப் பயிற்சிக்கு அதிகப்பட்சம் மூன்று பாடநேரங்களை ஒதுக்கினோம். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, உருது மொழிகள் போதிக்கப்பட்டன. சிறுவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பாடங்களைப் போதித்தோம். ஆங்கிலமும் கற்பித்துவந்தோம்...எல்லாக் குழந்தைகளுக்குமே சரித்திரம், பூகோளம், கணக்கு இவைகளில் ஆரம்பப் பாடங்களையாவது போதிக்க வேண்டியிருந்தது.தமிழும் உருதும் சொல்லிக் கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த சொற்பமான தமிழ் என் கப்பல் பிரயாண காலத்திலும் சிறையிலும் கற்றுக்கொண்டதாகும். போப் என்பவர் எழுதிய சிறந்த தமிழ்ப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறொன்றையும் நான் படித்ததில்லை. ஒரு கப்பல் பிரயாணத்தில் நான் கற்றுக் கொண்டதே உருது எழுத்துக்களைக் குறித்து எனக்கு இருந்த ஞானம். முஸ்லிம் நண்பர்களுடன் பழகியதால் நான் தெரிந்து கொண்ட சாதாரண பார்ஸிய, அரபுச் சொற்களே உருதுவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகும். உயர்தரப் பள்ளியில் நான் படித்ததற்கு மேல் எனக்குச் சமஸ்கிருதமும் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கற்றுக்கொண்டதற்கு அதிகமானதுமல்ல என் குஜராத்தி மொழி ஞானம்.

தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் கற்றுத் தந்தேன்
தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால் அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான்  தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள் என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை  என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லை. ஆகவே, நான் சந்தோஷமாகவே சமாளித்துவந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டிவந்தேன். ஆகையினால், அம்மொழியில் ஒன்றுமே தெரியாமல் இருந்தபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக்கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது. அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்துகொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்யவேண்டியதெல்லாம்.”

(காந்திஜி தம் பெயரைத் தமிழில் எம்.காந்தி என்று எழுதுவார்).

சாதிக் கட்டுப்பாடு மீறிய காந்திஜி
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு என் தாயாரின் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். அங்கே போய்ச் சேர்ந்ததும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்துமகா சமுத்திரத்தில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்றும், நான் இப்பொழுதுதான்  முதல்முறையாகக் கப்பல் பிரயாணம் செய்வதால் நவம்பர் மாதம் வரை நான் கப்பலேற அனுமதிக்கக் கூடாது என்றும் நண்பர்கள் என் சகோதரரிடம் கூறினர். இப்பொழுதுதான் புயல் காற்றினால் ஒரு கப்பல் மூழ்கிவிட்டது என்றும் யாரோ சொன்னார்கள். இதனால் என் சகோதரருக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. உடனே, கப்பல் பிரயாணம் செய்ய என்னை அனுமதிக்கும் அபாயத்திற்கு உடன்பட அவர் மறுத்துவிட்டார். என்னைப் பம்பாயில் ஒரு நண்பரிடம் விட்டவிட்டுத் தம் வேலையைக் கவனிக்க அவர் ராஜ்கோட்டுக்குத் திரும்பினார். என் பிரயாணச் செலவுக்கென்று வைத்திருந்த ஒரு மைத்துனரிடம் கொடுத்து, வைத்திருக்கச் சொல்லிவிட்டு, எனக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்யுமாறு சில நண்பர்களிடம் சொல்லிப் போனார். பம்பாயில் நாளை எண்ணிக்கொண்டே நான் காலம் கழித்தேன். இங்கிலாந்துக்குப் போகப்போவதைப் பற்றி ஓயாமல் கனவு கண்டுகொண்டிருந்தேன்.

இதற்கு மத்தியில், நான் வெளிநாட்டுக்குப் போகப்போவதைக் குறித்து என் சாதியினர் பரபரப்படைந்தார்கள். மோத் வணிக சாதியைச் சேர்ந்த யாரும் இதுவரை இங்கிலாந்துக்குப் போனதில்லை. நான் போகத் துணிந்தால் எனக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும்! சாதியினரின் கூட்டம் ஒன்றைக் கூட்டினர், அதன் முன்னால் ஆஜராகுமாறு எனக்குக் கட்டளை அனுப்பினர். நானும் போனேன். திடீரென்று எனக்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்தது என்பது எனக்கே தெரியவில்லை. எதற்கும் அஞ்சாமல் கொஞ்சமும் தயக்கமின்றிக் கூட்டத்திற்கு முன்னால் போனேன். சாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர உறவினர். என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராகவும் இருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார்: 
“ இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தர்மங்களைக் கைவிடாமல் அங்கே வசிப்பதே சாத்தியமில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஐரோப்பியருடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் வேண்டிவரும்.”

இதற்கு நான் சொன்ன பதிலாவது: “ இங்கிலாந்துக்குச் செல்வது நம் மதத்திற்கு விரோதம் என்று நான் கருதவில்லை. மேற்கொண்டு படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகப் பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என் தாயார் முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞை என்னைப் பாதுகாக்கும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”
இதற்கு சேத், “ அங்கே நமது மத ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து நடப்பது சாத்தியமே இல்லை என்று நாங்கள் சொல்லுகிறோம். எனக்கும் உன் தந்தைக்கும் இருந்த உறவு உனக்குத் தெரியும். ஆகவே, நான் கூறும் புத்திமதியை நீ கேட்க வேண்டும்” என்றார்.

“ அந்த உறவுகளையெல்லாம் நான் அறிவேன். நீங்கள் எனக்குப் பிதாவைப் போன்றவர். ஆனால் இதில் நான் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துவிட்டதை நான் மாற்றுவதற்கில்லை. என் தந்தையின் நண்பரும் ஆலோசகருமான கற்றறிந்த ஒரு பிராமணர் நான் இங்கிலாந்துக்குச் செல்வதில்  எந்தவித ஆட்சேபமும் இருப்பதாகச் சொல்லவில்லை. என் தாயாரும் சகோதரரும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்” என்றேன்.
“என்றாலும் சாதிக் கூட்டத்தின் கட்டளையை நீ மீறி நடக்கப் போகிறாயா?”“ எனக்கு வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் சாதி தலையிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.”

இதைக் கேட்டதும் சேத்துக்குக் கோபம் வந்துவிட்டது. கடுமையாகப் பேசினார். அதற்கெல்லாம் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். எனவே சேத் பின்வருமாறு உத்தரவு பிறப்பித்தார்: “இன்றுமுதல் இந்தப் பையனை சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவனாக நடத்த வேண்டும். இவனுக்கு யார் உதவி செய்தாலும், இவனை வழியனுப்ப யார் துறைமுகத்திற்குச் சென்றாலும் அவர் ஒரு ரூபாய் நான்கு அணா அபராதம் விதிக்கப்படுவார்!”,,இந்த உத்தரவைக் கேட்டு நான் கலங்கிடவில்லை. சேத்திடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். இதை என் சகோதரர் எப்படி ஏற்பாரோ என்று பயந்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக அவர் உறுதியுடன் இருந்தார். சேத்தின் கட்டளை எதுவானாலும் நான் போவதை அனுமதிப்பதாகக்  கடிதம் எழுதி எனக்கு உறுதி கூறினார்.
...கடைசியாகச் செப்டம்பர் 4-ஆம் தேதி பம்பாயிலிருந்து நான் கப்பலில் புறப்பட்டேன்.”

சகிப்புத்தன்மைப் பண்பு
ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும், மற்ற சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என் தந்தையும் தாயாரும் விஷ்ணு கோவிலுக்குப் போவதோடு சிவன் கோவிலுக்கும் ராமர் கோவிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப் போவார்கள்; அனுப்புவார்கள். ஜைன பிஜுக்கள் அடிக்கடி என் தந்தையைப் பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்துகொள்வார்கள். சமய விஷயங்களைக் குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.இதல்லாமல் அவருக்கு முஸ்லிம், பார்ஸி நண்பர்களும் உண்டு. தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள். எப்பொழுதுமே அவர்கள் கூறுவனவற்றுக்கு மதிப்புத் தந்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர் கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்துவந்ததால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது. மற்ற சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்ளும் பண்பை இவையெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்த்தன.”

காந்திஜி எழுதிய “சத்திய சோதனை”  என்ற சுயசரிதை நூலிலிருந்து...

தொகுத்தவர்: தி.வரதராசன்