tamilnadu

img

திருச்சி சாலை மேம்பாலத்தை இடிக்க தேவையில்லை - பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட வல்லுநர்கள் குழு அறிக்கை

தொடர் விபத்துகள் ஏற்பட்ட கோவை - திருச்சி சாலையிலுள்ள மேம்பாலத்தை இடிக்க தேவையில்லை என அப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட வல்லுநர்கள் குழு ஆட்சியரிடம் சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவை – திருச்சி சாலை, ராமநாதபுரம் சுங்கம் மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் மூன்று பேர் விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையிலான குழு சென்னை ஐ.ஐ.டி சிவில் துறையின் உதவியை நாடியது. இதனையடுத்து முனைவர் கீதா கிருஷ்ணன் தலைமையிலான குழு இரண்டு முறை அந்த மேம்பாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையிலான குழுவுக்கு ஐஐடி வல்லுநர்கள் குழு ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளது.
அதில், இந்த  பாலத்தை மீண்டும் இடித்து கட்ட வேண்டிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் சுங்கம் பகுதியிலுள்ள வளைவுக்கு முன் 150 மீட்டர் தூரத்தில் வேகம் காட்டும் கருவி பொறுத்த வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அனைத்து வாகனங்களும் 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள் செல்ல வேண்டும். கான்கிரீட் வேகத்தடை கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினாலும், இருசக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட கிராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக ரப்பர் தடுப்புகள் இருசக்கர வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி வேகத்தை தன்னுள் ஈர்க்கும். இதனால் வேகம் குறைந்து விபத்துக்கள் நடக்காது என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

;