tamilnadu

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை முயற்சி

நாமக்கல், ஜூலை 31- குமாரபாளையத்தில் மகளிர் குழுக்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் குழந்தையுடன் குடும்பமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள சுந்தரம் காலனி பகுதியில் வசிப்பவர் வேணுகோபால். இவர் விசைத்தறிகளை வாடகைக்கு எடுத்து நடத்தி  வந் துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக விசைத்தறி தொழிலை சரிவர நடத்த முடியாததால் பல்வேறு மகளிர் குழுக்களில் கடன் பெற்றுள்ளார். ஆனால், இந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளர்.  இந்நிலையில் புதனன்று காலை வேணுகோபால் ரொட்டித் துண்டுகளில் விவசாயத்திற்கு பயன்படுத் தப்படும் உயிர் கொல்லி மருந்தை கலந்து தனது மனைவி மேகலா மற்றும் தாய் சொர்ணலதாவுடன் சாப்பிட்டுள்ளார். மேலும் தனது 3 வயது மகன் மித்ரனுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து உள்ளார். இந்நிலையில் வேணுகோபாலின் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது அனைவரும் மயக்க நிலையில் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் நான்கு பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடன் தொல்லை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.