திருப்பூர், மே 23 –திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி பெற்றார்.கே.சுப்பராயன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்றார். ஆனந்தனை 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் கே.சுப்பராயன் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.இத்தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின்வேட்பாளர் சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும், அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்பி.ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா வாக்குகள் 21 ஆயிரத்து 861 பதிவானது.வெற்றி பெற்ற கே.சுப்பராயனுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சுப்பராயன் கூறுகையில், இத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி அலை தமிழ்நாட்டைத் தீண்ட முடியாது என்று இத்தேர்தல் உத்தரவாதப்படுத்தி உள்ளது. பெரியார் பிறந்த மண், திராவிட இயக்கத்தின் முற்போக்கு கருத்துகள் இம்மண்ணில் விளைந்துள்ளது. மோடியின் வர்ணாசிரமக் கொள்கைகள் இம்மண்ணில் எடுபடாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மீது ஆழமானநம்பிக்கை, எதிர்பார்ப்பை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அந்த நம்பிக்கைக்குப் பொருத்தமான பிரதிநிதியாக செயல்படுவேன். இந்தியாவின் நிலை நன்றாக இல்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை போல், பாஜகவுக்கு சீட்டை அதிகப்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக உருக்குலைக்கப்பட்டு உள்ளது. திருப்பூரின் தொழிலுக்கும், விவசாயத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும்மக்களின் கருவியாக நின்று நிறைவேற்றி வைக்க முயற்சிப்பேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, என்னை எதிர்த்துவாக்களித்தவர்களுக்கும், தேர்தலிலேயே வாக்களிக்காதவர்களுக்கும் பிரதிநிதி என்ற ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவேன். நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் நிதியைப் பயன்படுத்துவதில் கமிஷன் கலாச்சாரத்தை ஒழிப்பேன். என் கட்சி, என்னைச் சார்ந்த குழு என்ற குறுகிய வட்டத்தில் இல்லாமல் ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற என் கடமையை ஆற்றுவேன். இவ்வாறு கே.சுப்பராயன் கூறினார்.