tamilnadu

img

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுதும், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 4,027 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், 1,14,422 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இன்று காலை, நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்ததுள்ளது. அரியானாவில் 14 பேர், உத்தரப்பிரதேசம் 9 பேர், டெல்லியில், கர்நாடகாவில் தலா 4 பேர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, லடாக் யூனியன் பிரதேசத்தில் தலா 2 பேர், தெலுங்கானா, தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என்றும், 1-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பிற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் திரையரங்குகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. அதே போல், கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக பெரியார் புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.