இந்தியா - வங்கதேச வீரர்கள் மோதல் சம்பவம்
இளசுகளின் அதிரடி ஆட்டத்தால் பரபரப்பாகத் தொடங்கிக் கைகலப்புடன் நிறைவு பெற்ற 13-வது இளையோர் உலகக்கோப்பையை கத்துக்குட்டியான வங்கதேசம் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி விதிகளை மீறி செயல்பட்டது. அதாவது வெற்றி கொண்டாட்டத்தின் போது வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இந்திய வீரர் ஒருவரை நெஞ்சைப் பிடித்து கீழே தள்ளினார். நிலை தடுமாறிய அந்த இந்திய வீரர் பதிலடி கொடுக்க, அதே வங்கதேச வீரர் பேட்டை (கிரிக்கெட் மட்டை) வைத்து இந்திய வீரர்களை அடிக்க பாய்ந்தார். நடப்பு சாம்பியனான நாங்கள் எப்படி சும்மா இருப்போம் என்ற விதத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி மோதலுக்குத் தயாராக வங்கதேச வீரர்கள் தெறித்து ஓடினர். வங்கதேச வீரர்களின் இந்த அநாகரீக மான செயலால் கொதித்தெழுந்த இந்திய கேப்டன் பிரியம் கார்க் குற்றம் சாட்டினார். இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாகச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டு ஜாக்கிரதையாக இருங்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
அந்த 5 பேர் யார்?
முகமது தவ்கீத், ஷமிம் உசேன், ரகிபுல் ஹசன் - வங்கதேசம், ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் - இந்தியா மேற்கூறப்பட்ட 5 பேருக்கும் இது இறுதிக் கட்ட எச்சரிக்கை ஆகும். இதே போல மோதல் சம்பவங்களை வருங்காலத்தில் தொடர்ந்தால் லெவல் புள்ளிகள் மூலம் சர்வதேச தடை உத்தரவு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.