கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி
சீனாவை புரட்டியெடுத்த கொரோனா வைரஸ் என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 45-க்கும் நாடுகளில் அடுத்த கட்ட ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. சீனா வுக்கு வெளியே மொத்தம் 85 நாடு களில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் 17 மடங்கு வேகத்தில் பரவி வருவதால் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வரும் சொந்த மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மூலம் இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் எனவும், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளின் போது போதுமான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது. இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள். இதனால் கொரோனா வைரஸ் எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவிவிடும் என்பதால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்ட படி நடக்குமா? என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ”முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுடன் ஐபிஎல் நடக்கும்” என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலி அறிவித்தாலும், மத்திய அரசு அனுமதித்தாலும் கொரோனாவின் பரவல் படியே ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யம் மற்றும் அந்த தொடரின் ஆயுட்காலம் இருக்கும். வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ள தயக்கம் காட்டுவார்கள் என்பதால் மார்ச் 3-ஆம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் சீரி ஏ தொடர்
இத்தாலி நாட்டின் முன்னணி கால்பந்து லீக் தொடரான “சீரி ஏ” தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புரியும் படி சொன்னால் மைதானத்துக்குள் பங்கேற்கும் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், காவல்துறையினர், மைதான பராமரிப்பாளர்கள், தொழிநுட்ப வல்லுநர்கள் மட்டுமே இருப்பார்கள் மற்ற யாரையும் அனுமதிக்கமாட்டார்கள்.
எவரஸ்ட் பிரீமியர் லீக் நிறுத்தம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஐபிஎல் தொடரைப் போல எவரஸ்ட் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 14-ஆம் தேதி தொடங்குவ தாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் இத்தொடர் ஒத்திவைக்கப்படுவ தாக நிர்வாக இயக்குநரான அமீர் அக்தர் அறிவித்துள்ளார்.