விளையாட்டு என்பது கலையைத் தாண்டி பொழுதுபோக்குக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் விளையாடப்படுகிறது. தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு வருமானத்திற்கான ஒரு தொழிலாகவே கருதப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கபடி, கைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மின்டன் என பழகிப்போன பலருக்கும் புதுமாதிரியான பளுதூக்கும் போட்டியான ‘கெட்டில் பெல்’ விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய விளையாட்டில் சர்வதேச அளவில் தங்கம் வென்று சாதித்துக் காட்டி வரும் தமிழக வீரர்களில் ஒருவர் விக்னேஷ் ஹரிகரன்.
புதிதல்ல இது...
ரஷ்ய ராணுவத்தில் வீரர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக இருந்ததால் விளையாட்டு போட்டியாக மாற்றினர். பின்னர், 1948 ஆம் ஆண்டு ‘கெட்டில்பெல்’ என புதிய விளையாட்டை அறிமுகம் செய்தனர். 1970-களில் தேசிய விளையாட்டாகவே ரஷ்யாவில் உருவெடுத்தது. பிறகு, பிரிட்டனிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் அறிமுகம் செய்தனர். தற்போது இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஒவ்வொன்றும் ஒரு விதம்...
பார்ப்பதற்கு குடுவைப் போன்று லேசாக தான் தெரிகிறது. ஆனால் பாராங்கல்லை போன்று கனமான இரும்பு குண்டுகள் அவை. ஒவ்வொரு குடுவைக்கும் கலர் கலராக கைப்பிடி வைத்து பந்துகள் போல் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு வண்ணமும் அதன் எடையை அடையாளம் காட்டுகிறது. 8 கிலோவில் தொடங்கும் ஒவ்வொரு குண்டும் 12, 16, 20, 22, 24,32, 36 கிலோ எடைகளை கொண்டவைக ளாகும். பளுதூக்கும் போட்டியை போன்று ஜெர்க், லாங்க் சர்கிள், ஸ்னாட் என மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது. முதல் மற்றும் மூன்றாவது பிரிவுகளில் ஒன்று அல்லது ஒரே எடை கொண்ட இரண்டு கெட்டில் பெல்களை கீழிருந்து கைகளால் குண்டுகளை தலைக்குமேல் தூக்கி இறக்க வேண்டும். எவ்வளவு நேரம்? எத்தனை முறை? தூக்குகிறோம் என்பதுதான் முக்கியம். பின்பு காலின் முட்டிகளுக்கு இடையில் ஒரே அசைவில் கொண்டு வந்து மீண்டும் தலைக்கு மேல் தூக்க வேண்டும். சற்று அலட்சியம் காட்டினாலும் பெரும் ஆபத்து தான். இரண்டாவது பிரிவில், ஒரு கையில் கெட்டில் பெல்லை நெஞ்சோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும். பிறகு அலேக்காக தலைக்கு மேலே தூக்க வேண்டும். மீண்டும் நெஞ்சோடு அணைத்துக் கொள்வது போல கீழே கொண்டுவர வேண்டும். இதை வீடியோவில் பார்க்கும் போது நமக்கே மனம் படபடக்கிறது.
அசத்தலோ அசத்தல்...
சாப்ட்வேர் இன்ஜினியராக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த விக்னேஷ் ஹரிஹரன் கை நிறைய சம்பாதித்தார். ஆனாலும், தன் விருப்பமான விளையாட்டுத் துறையில் சாதிக்க அந்தப் பணியை உதறிவிட்டார். தமிழகத்தில் அதிகம் அறியப்படாத இந்த கெட்டிபெல் விளையாட்டை தேர்வு செய்துள்ளார்.
இப்படி சவால் நிறைந்த இந்த விளையாட்டில் மாநில அளவில் மூன்று முறையும், தேசிய அளவில் நான்கு முறையும் பதக்கங்களை குவித்த ஹரிஹரன், கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்றார். தைவான், சீனா, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட வீரர்களுடன் இந்தியா சார்பில் களத்தில் குதித்தார். இவர்களில் சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஹரிகரன் மட்டுமே பிரபலமானார். காரணம் இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தை தட்டி வந்ததாகும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த சர்வதேச போட்டியில், இரண்டு கைகளிலும் தலா 24 கிலோ எடைகொண்ட குண்டுகளை தூக்கும் போட்டியில் 10 நிமிடத்தில் 60 முறை தூக்கி இறக்கினார். ஸ்னாட்ச் பிரிவில் 93 முறை தூக்கி, இறக்கி அசத்தலாக தங்கப்பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து நடந்த மாரத்தான் என்னும் போட்டியில் 30 நிமிடங்களில் 24 கிலோ எடை கொண்ட குண்டை 232 முறை தூக்கி, இறக்கி வெள்ளிப் பதக்கமும் வென்று சாதித்துக் காட்டினார்.
புலிக்கு பிறந்தது...
அப்பா,அம்மா இருவரும் வாலிபால் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்கள். தாத்தா சிலம்பாட்ட வீரர். இதனால் விக்னேஷ் ஹரிகரன் சர்வதேச வீரராக நாட்டின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதை பார்க்க வேண்டும் என்பது அவரது குடும்பத்தின் ஆசையாக இருந்தது. அதனை நிறைவேற்றிய ஹரிகரன் விக்னேஷ்,தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்று தனது 34வது வயதில் நிரூபித்தும் சாதித்தும் காட்டிவிட்டார்.
அனுபவம் புதுமை...
எல்லோரையும் போல் பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று இருப்பதை விட சமூகத்திற்கும் இளைய தலைமுறைக்கும் எதையாவது செய்தாக வேண்டும் என்பதற்காக அவர் தேர்வு செய்தது உடற்பயிற்சியாகும். காரணம், இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் முதுகுவலி, கழுத்துவலி, படி ஏறினால் மூச்சு வாங்குகிறது என சிரமப்படுகின்றனர். அப்படியே உடற்பயிற்சி மையத்திற்கு சென்றாலும் உடல் அழகில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலிருந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே தனது சாப்ட்வேர் பணியை துறந்து உடல் ஆரோக்கியம், மன வலிமையை அதிகரிக்கவும் தனது சொந்த முயற்சியில் சென்னை கொளத்தூரில் உடற்பயிற்சி மையம் ஒன்றை சொந்தமாக நிறுவினார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு சம்பந்தமான கண்காட்சி, பயிலரங்கில் பங்கேற்றபோது கெட்டில் பெல் விளையாட்டைப் பற்றி கேள்விப்பட்டு ஆர்வம் காட்டினார். ஆனால், இவைகள் எதுவுமே அவரது குடும்பத்திற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. முன் வைத்த காலைப் பின் வைக்க விரும்பாத விக்னேஸ்வரன் கொல்கத்தாவின் அபினவ் சர்காரிடம் பயிற்சியைத் தொடர்ந்தார். சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வரும் விக்னேஷ், உடற்பயிற்சி மட்டுமன்றி கெட்டில்பெல் விளையாட்டையும் இலவசமாக சொல்லி கொடுத்து வருகிறார்.
தடைக்கற்கள்...
விக்னேஷ் ஹரிஹரனுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் என்றாலும் அவரது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. பிறந்தது வளர்ந்தது அனைத்தும் சென்னை தான். பள்ளிப் படிப்பை முடித்ததும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார். படிப்பில் கெட்டிக்காரரான விக்னேஷ் ஹரிஹரன் அவருக்குப் பிடித்த விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருகிறார். தற்போது சர்வதேச போட்டிகளுக்காக வெளிநாடுகள் சென்று விளையாடுவதில் மிகவும் கஷ்டப்படுகிறார். தற்போதுகூட மூணு லட்ச ரூபாய் கடன் பெற்றுத் தான் ஆஸ்திரேலியா சென்று வந்துள்ளார். இது இவருக்கு மட்டுமல்ல இவரை போன்று பலருக்கும் உள்ளது. விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும் என்று நினைக்கும் பலருக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. இந்தியாவில், வேகமாக பிரபலமாகி வரும் இந்த விளையாட்டை ஊக்குவிக்க, அரசும் தனியார் நிறுவனங்களும் முன்வர வேண்டும். மிகச்சிறந்த விளையாட்டான இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கத்தை வெல்ல கடுமையாக உழைத்து வரும் இவரை வாழ்த்துவோம்!