கவிஞர் முடியரசன் தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர்.பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..’ என்று பாராட்டப்பெற்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர். தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர்.எனவேதான் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் ‘சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை’ என்று போற்றினார். சாதி-சமய,சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகளைச் சாகித்திய அகாடமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டரசால் கவிஞரின் படைப்புகள் 2000 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
“முடியரசன் கவிதை முத்துக்கள்”, எனும் நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.கவிஞர் முடியரசன் 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாள் மறைந்தார்.