கல்குவாரிகளில் சட்ட விரோதமாக தண்ணீர்: டேங்கர் லாரிகள் பறிமுதல்
காஞ்சிபுரம், ஜூன் 21 காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கல்குவாரிகளில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்த டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் விவசாய கிணறுகளில் மாவட்ட ஆட்சியரின் பெயரை சொல்லி அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஆயில் மோட்டார், ஜெனரேட்டரை பொருத்தி தண்ணீர் திருடப்பட்டு வருவதாகவும், இதனை வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து மேற்படி ஊராட்சியில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வியாழனன்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது தண்ணீர் திருட்டில் ஈடுபட்டிருந்த டேங்கர் லாரிகள், ஆயில் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனை கண்டதும் மற்ற லாரி ஓட்டுநர்கள் லாரிகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். மேலும் இது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் நிதி சார்ந்த மாற்று முதலீடுகள்
சென்னை,ஜூன் 21- நாட்டில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த நிதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குவான்டம் இந்தியா ஈஎஸ்ஜி நிதியமானது பங்குசந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டமாகும். இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களில் இந்த ஈஎஸ்ஜி நிதி முதலீடு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை, அந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூக செயல்பாடுகள் மற்றும் நிர்வாக திறன் ஆகியவற்றை தீவிரமாக பகுப்பாய்வு செய்த பிறகு முதலீட்டிற்கான உத்தி வகுக்கப்படுகிறது. இந்த புதிய நிதி திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருகிற ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். மாற்று முதலீடுகளின் மூத்த நிதி மேலாளர் சிராக் மேத்தா மற்றும் இணை நிதி மேலாளர். சினேகா ஜோஷி ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.