tamilnadu

img

கள்ளக்குறிச்சி பள்ளியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - முதல்வரே நியாயம் வேண்டும்

சக்தி மேல்நிலைப்பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை சிலர் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, ஜூலை, 17ல், மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் 65 நாளுக்கு பின் பள்ளி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை, 5:30 மணியளவில், ‘நக்கீரன்’ பத்திரிகையாளர் பிரகாஷ், 56, புகைப்பட பத்திரிகையாளர் அஜீத்குமார், 24, ஆகியோர், பள்ளியில் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து செய்தி சேகரித்துள்ளனர். பின், காரில் சென்றபோது, சிலர் வழிமறித்து காரை உடைத்து, தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தப்பித்து, சின்னசேலத்தில் இருந்து, சேலம் மாவட்டம், தலைவாசல் வந்தனர். அப்போது, காரை துரத்தி வந்த பத்துக்கும் மேற்பட்டோர், நிருபர், போட்டோ கிராபர் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், நிருபரை மீட்டு, தலைவாசல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தாக்குதலில் பல் உடைந்த போட்டோ கிராபர் அஜீத்குமார், காயமடைந்த நிருபர் பிரகாஷ் ஆகியோர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி பள்ளியில் செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் இதழ் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது குண்டர்கள் தாக்குதல். வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்த உண்மையை எழுதி வந்ததற்கு தண்டனையா?
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நியாயம் வேண்டும். பத்திரிகையாளர்களை தாக்கிய குண்டர்களை  தமிழ்நாடு காவல்துறை உடனே கைது செய்ய  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட வேண்டும். தாக்குல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;