நாகர்கோவில், ஏப்.1- குமரி மாவட்டத்தில் இராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் கயிறு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கயிறுகள் உள்நாட்டிலும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு போட்டதால் கயிறு உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி இருந்த கூலி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல கயிறு உற்பத்தி செய்ய பயன்படும் தென்னை நார், கதம்பல் நார் போன்றவற்றை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி குவித்து வைத்திருந்த நிலையில் மத்திய அரசு திடீரென 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இதனால் வியாபாரிகள் இந்த நாரை கயிறாக திரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நார் மழை பெய்தால் அழுகி அழிந்துவிடும் தன்மை கொண்டது. அதேபோல அதிக வெயில் காரணமாக எளிதில் தீப்பிடித்து அழிந்துவிடும். எனவே மத்திய மாநில அரசுகள் இந்த நாரை கயிறாக திரிக்க நான்கு நாட்கள் மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.