ஒடிசா மாநிலத்தில் 5வது முறை முதல்வராக பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் 147 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 112 தொகுதிகளில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதுபோல, மக்களவை தேர்தலிலும், பிஜு ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளி லும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து, சட்டசபை பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், நவீன் பட்நாயக் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கணேஷி லாலை சந்தித்து, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரியதுடன், தன்னை ஆதரிக்கும் 112 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் வழங்கினார்.
அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமைக்குமாறு நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் கணேஷி லால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.