செங்கோட்டையன் விரும்புவது என்ன?
தேசிய கல்விக் கொள்கை அமலாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் அந்த கொள்கையை அமலாக்கிவருகிறார்கள். பள்ளிகளை இழுத்து மூடுவது, அருகமை பள்ளியை மற்றொரு பள்ளியுடன் இணைப்பது, சில பள்ளிகளை மூடி அந்த பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவது என அறிவித்துள்ளார் முதல்வர். மாணவர்கள் மத்தியில் சாதி அடையாளத்தை முன்னிறுத்தும் விதத்தில் கயிறு, ஏதும் அணிந்து செல்வது கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஒரு ஒழுங்கு நடவடிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு தடை போடுகிறார். அப்படி என்றால் சாதி அடையாளத்தோடு ஆசிரியரும் மாணவர்களும் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விரும்புகிறாரா? அப்படி எனில் சாதிய மோதலும், சாதிய உணர்வும் எப்படி குறையும்?
உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?
உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் இறுதிக்குள் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அடுத்த செப்டம்பருக்குள் நடத்துவதாக சொல்லிக்கொண்டு உள்ளார்கள். எந்த வருடம் என்று சொல்வதில்லை. 2019,2020, 2021 என்று எந்த ஆண்டை குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. வேலூரில் நாங்கள் தான் வெற்றிபெற்றோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். எங்கள் செல்வாக்கு கூடியிருக்கிறது என்கிறார். அப்படி என்றால் உள்ளாட்சித் தேர்தலை அறிவியுங்கள், யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று அப்போது தெரிந்துவிடும்.
தூர்வாருவதில் கொள்ளை
மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி அதை பயன்படுத்திட வேண்டிய அற்புதமான காலம் கோடை காலம். ஆனால் என்ன கொடுமை என்றால் கடும் வறட்சி இருந்தும் கூட தமிழ்நாட்டில் ஏரி, குளங்களை தூர்வாரவில்லை. தென் மேற்கு பருவ மழை அதிகமாக பெய்து மேட்டூர் அணை திறக்கப் போகிறார்கள் என்று சொன்ன பிறகு தான், ரூ.300 கோடி ஒதுக்கி இப்போது தூர்வாருகிறோம் என்று சொல்கிறார்கள். ஊராட்சிக்கு நிதி ஒதுக்கியதாக அரசு கூறுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஊராட்சி மன்றம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அனைத்து உள்ளாட்சி மன்றங்களும் இப்போது அதிமுக கையில் உள்ளன. அதனால் தூர்வாருகிறோம் என்ற பெயரில் மொத்த பணத்தையும் கணக்கெழுதி எடுத்துச்செல்லப் போகிறார்கள்.
குடிமராமத்து பணமும் கையாடல்
குடிமராமத்துப் பணியை தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளிடம் கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் மக்களுக்கு வேலையும் கிடைக்கும்; நீர்நிலை தூர்வாரும் பணி உருப்படியாகவும் நடக்கும். ஆனால் அரசு குடிமராமத்து வேலை வேறு, நூறு நாள் வேலை வேறு என்கிறது. இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம். மக்களைக் கொண்டு செய்வது தான் குடிமராமத்து. இயந்திரத்தை வைத்து, வேலை செய்வது போல காட்டிவிட்டு அந்த பணத்தை மொத்தமாக எடுத்துச்செல்கிறார்கள். எங்கும் மராமத்து வேலை நடப்பது இல்லை. மேட்டூர் அணை தண்ணீர் திறக்கும் போது குடிமராமத்து செய்தால் எத்தனை குளங்களை தூர்வார முடியும்? தூர்வாருகிற பணிக்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கிய பணத்தில் 10 சதவீதப் பணிகள் தான் நடந்துள்ளன. 90 சதவீதம் முழுக்க முழுக்க முறைகேடு தான்.
சுருட்டுவதே கொள்கை
கோடை காலத்தை பயன்படுத்தி திண்டுக்கல் போன்ற கடும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஒரு தொலை நோக்கு பார்வையில் மழை நீர் சேகரிப்பு திட்டங்களை அமலாக்கி இருக்கலாம். நிலத்தடி நீரை செறிவூட்டி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை போக்கியிருக்கலாம். அது பற்றியெல்லாம் அதிமுக அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லை. அவர்களது ஒரே கொள்கை என்ன வென்றால் ஆட்சியில் இருக்கும் வரை எப்படி சுருட்டுவது, கொள்ளை யடிப்பது என்பது தான்.
ரேசன் அரிசி கிடைக்குமா?
ரேசன் கார்டுகளை மறு சோதனைக்கு உட்படுத்த வீடு வீடாக செல்ல உள்ளனர். ஒரு கோடியே 92 லட்சம் குடும்ப கார்டில் எது தகுதி யான கார்டு, எது தகுதியற்றது என்று கண்டுபிடிக்கப் போகிறார்கள். இதில் 3ல் 2 பகுதி கார்டுகளை தகுதியற்றது என்றும், இந்த அட்டைகளுக்கு ரேசன் பொருட்கள் தரப் போவதில்லை என்று அறிவிக்கப் போகிறார்கள். எனவே தமிழக மக்கள் ஒரு மோசமான எதிர்காலத்தை எதிர் நோக்கி யிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நீலகிரிக்கு வராதது ஏன்?
நீலகிரியில் இவ்வளவு வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் அங்கு போகவில்லை. மழை வெள்ளத்தில் அரசு அதிகாரிகள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் மழை பெய்தது, நான் திரும்பி போய்விட்டேன் என்று ஒரு முதல்வர் சொல்லலாமா?
முதலமைச்சர் நேரடியாக சென்று மந்திரத்தில் மழை வெள்ளத்தை தடுத்து நிறுத்த முடியாது. நேரடியாக வந்து பார்த்தால் உண்மை நிலை, கொடுமை தெரியும் என்பதற்காகத்தான் முதல்வர் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் கிடைக்கும் என்று தான் அவர் போகவேண்டும் என்று கூறுகிறோம். முத லமைச்சர் அந்த இடத்திற்கு சென்று கால்பட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு முதலமைச்சர் தானாக அங்கு செல்ல வேண்டும் என்ற அக்கறை இருக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களுக்காக ஒன்றுபட்ட போராட்டம்
காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கையை மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அனைத்து கட்சியினரை அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறை வேற்றி அனுப்பியுள்ளோம். அதைப் பற்றியெல்லாம் மோடி அரசு கவ லைப்படவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுப்போம்; நடவடிக்கை இல்லை என்றால் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திட்டமிடுவோம் என்று சொன்னார். அப்படி மீண்டும் அனைத்து கட்சி கூட்டப்பட்டால் காஷ்மீருக்காக அனைத்துக் கட்சிகளின் சார்பாக ஒன்று பட்ட போராட்டத்தை நடத்துவோம்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உள்ளனர்.