கரூர், மே 24-கரூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கியவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் செ.ஜோதிமணி. இவர் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 4.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவின் மு.தம்பிதுரையை தோற்கடித்தார். வெற்றி பெற்ற செ.ஜோதிமணி, செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கடுமையாக உழைத்ததால் தான் 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. கரூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் என்ற பெருமையை மக்கள் எனக்கு அளித்துள்ளார்கள். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் விரைந்து செயல்படுத்துவோம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் முன் நிறைய விவாதங்கள் நடந்தது.தேர்தலில் பணம் ஒரு தகுதி, ஆதலால் எளிய பின்னணியில் வரும் என்னால் ஜெயிக்க முடியாது என்ற விவாதங்கள் நடைபெற்றன. அதை புறந்தள்ளி விட்டு மக்களும் என்னை ஏற்று, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு வாக்களித்துள்ளார்கள். இது நான் தேர்தலில் போட்டியிட்டதாகவோ, எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றியாகவோ நான் நினைக்கவில்லை. மக்களில் ஒருவர் போட்டியிட கிடைத்த வாய்ப்பாகவும், அவர் வெற்றி பெற்றதாகவும் தான் கருதுகிறேன். இதன் மூலம் நிறைய பேர் அரசியலுக்கு, தேர்தலுக்கு தயங்காமல் வருவார்கள் என நினைக்கிறேன். எனது வெற்றி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அரசியலுக்கு வரச் செய்யும். இவ்வாறு செ.ஜோதிமணி கூறினார். பேட்டியின் போது திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, திமுக மாநில விவசாய அணித்தலைவர் ம.சின்னசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, திமுக நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.