உத்தரப்பிரதேச மாநிலம், பாஸ்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி வயல்வெளியில் இறந்து கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அச்சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தைப் பதிவு செய்ய மறுத்திட்ட காவல் நிலைய அதிகாரியும், அங்கே பணியாற்றிய காவலரும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலம், பாஸ்டி கிராமத்தில் கல்வாரி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த தலித் சிறுமி, நவம்பர் 10 அன்று தன்னுடைய மொபைல் போனுடன் வெளியே சென்றிருந்தவர், வீட்டிற்குத் திரும்பிவரவில்லை. அவர் வராததன் காரணமாக 12ஆம் தேதி அவர்தம் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் என்று பாஸ்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹெம்ராஜ் மீனா கூறினார்.
இதற்கிடையில் அந்தப்பெண்ணின் சடலம் அவர் வீட்டிலிருந்து 70 மீட்டர் தூரத்திலிருந்த வயல்வெளியில் வைக்கோல் போரின் கீழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்பெண்ணைக் காணவில்லை என்று அவர்தம் குடும்பத்தினர் புகார் அளித்தைப் பதிவு செய்து, வழக்கு விசாரணையைத் துரிதமாக மேற்கொள்ளாததற்காக, காவல் நிலைய அதிகாரியும், காவலர் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக, காவல் கண்காணிப்பாளர் ஹெம்ராஜ் மீனா கூறினார். இப்போது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இறந்த பெண்ணின் உறவினர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில் அந்தப் பெண்ணின்மீது அமிலம் (‘ஆசிட்’) வீசப்பட்டிருப்பதுபோல் தோன்றுவதாகத் தெரிவித்தார். எனினும் அப்பெண்ணின் சடலக்கூராய்வு சான்றிதழ் (போஸ்ட்மார்டம் சர்ட்டிபிகேட்) இன்னமும் வரவில்லை.
இவ்வழக்கு விசாரணைக்காக மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டிருப்பதாக, காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
(ந.நி.)