சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா கடந்த 8-ந் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக்குசுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட 3 பேராசிரியர்களே காரணம் என்று தனது செல்போனில் குறித்து வைத்துள்ளார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் குறிப்பிட்ட 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் பாத்திமா தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ.யில் பணியாற்றிய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு குழுவில் இடம் பெற்றுள்ளதாக அரசு தகவல் தெரிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.