tamilnadu

img

கோவிட்-19 மரணங்களை குறைக்கும் டெக்ஸாமெத்தசோன் - ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல்

கோவிட்-19 வைரசால் ஏற்படும் மரணங்களை, டெக்ஸாமெத்தசோன் என்ற மருந்து குறைத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் பல்வேறு நாடுகளின் மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும், கோவிட்-19 தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவிட்-19 சிகிச்சைக்கு, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகளை உலக நாடுகள் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டது. இந்த சூழலில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், டெக்ஸாமெத்தசோன் எனப்படும் மருந்தை, கோவிட்-19 நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தினர். டெக்ஸாமெத்தசோன், ஆஸ்துமா, ரூமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மருந்தாகும்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 11,500 பேர் சோதனைக்கு முன்வந்தனர்.  அதில் 2 ,104 பேருக்கு டெக்ஸாமெத்தசோன் மருந்து 10 நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. 4,321 பேருக்கு வழக்கமான சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் டெக்சாமெத்தசோன் மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கும், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றவர்களில் ஐந்தில் ஒரு பங்கும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த நிலையில், கோவிட்-19 வைரசால் ஏற்படும் மரணங்களை, டெக்ஸாமெத்தசோன் வெகுவாக குறைத்துள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸாமெத்தசோன் மருந்தை தயாரிப்பதால் 10 ரூபாய்க்கு இந்த மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், லேசான அறிகுறியுடன் உள்ள கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.