ஈரான் மீது தடை விதித்து மனித நேயத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்பு பதவியேற்ற பின் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் 66 வது பிராந்திய அமர்வில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி உரையாற்றினார். அப்போது ஹசன் கூறியதாவது“ எந்த ஒரு காரணமும் இல்லாமல் சவுதி அரேபியாவின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியது. எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் எங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்து வருகிறது” என்று விமர்சித்தார்.