அமெரிக்காவில், கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட வேலையின்மை குறைக்க, ஹெச்1பி விசா வழங்குவதை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறுத்த அமெரிக்க திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,89,701 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,16,034 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், அந்நாட்டில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்க, வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசா வழங்குவதை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக ”தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணி புரியும் வகையில் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டு தோறும் 65 ஆயிரம் 'எச்-1 பி' விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் கடும் போட்டி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.