புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து பிப்ரவரி 26-ஆம் தேதி குவாலிபையர் ஆட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற 126-ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி “பாயிண்ட் மழை” பொழிந்தது. 74 - 37 என்ற புள்ளிக்கணக்கில் புரட்டியெடுத்து பிரம்மாண்ட வரலாற்று வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல், பெங்கால் அணியை 7 முறை ஆட்டமிழக்க வைத்து தமிழ்நாடு வீரர்கள் மிரட்டினர். தமிழ்நாடு தரப்பில் விஷால் 19 புள்ளி களையும், நரேந்தர் 17 புள்ளிகளையும் குவித்து புரோ கபடி உலகில் தமிழ்நாடு அணியின் வரலாற்றுக்கு உதவினர்.
தமிழ்நாடு அணியின் வரலாற்றுச் சாதனைகள்
1. புரோ கபடி வரலாற்றில் அதிக புள்ளிகளை குவித்த அணி(74 புள்ளிகள்)
2. அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வென்ற ஒரே அணி(37 புள்ளிகள்)
3. ஒரு ஆட்டத்தில் ஒரு அணியை அதிகமுறை ஆல்-அவுட் செய்த அணி என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது(7 முறை)
4. இதுபோக புரோ கபடி அணி வரலாற்றில் இரு அணிகளும் இணைந்து அதிக புள்ளிகள் குவித்த ஆட்டம் (111 புள்ளிகள்) என்ற பெருமையை தமிழ்நாடு - பெங்கால் அணிகள் பெற்றுள்ளன.
குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
1. ஜெய்ப்பூர்; 2. புனே; 3. தில்லி;
4. குஜராத்; 5. ஹரியானா; 6.பாட்னா
இன்றைய ஆட்டம்
மும்பை - தெலுங்கு டைட்டன்ஸ்
இடம் : தேவிலால் மைதானம், பஞ்ச்குலா, ஹரியானா
நேரம் : இரவு 8 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
ரசிகர்களின் உற்சாகத்துடன் விடைபெற்றது தமிழ்நாடு
புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசனில் கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட தமிழ்நாடு அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், பார்ம் பிரச்சனையால் நடுக்கட்டத்தில் கடுமையாக திணறியது. இதனால் போதுமான புள்ளிகளை குவிக்க முடியாமல் கடைசி இடத்தில் தவித்த தமிழ்நாடு அணி, கடைசி 10 ஆட்டங்களில் ஓரளவு திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 புள்ளிகளை நெருங்கியது.
இதனால் தமிழ்நாடு அணி குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 5 ஆட்டங்களில் 3 தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்ததால் ஏறக்குறைய தமிழ்நாடு அணியின் குவாலிபையர் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
எனினும் பெங்கால் அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியோடு விடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தது போலவே பிரம்மாண்ட வரலாற்று வெற்றியோடு (51 புள்ளிகளுடன் தரவரிசையில் 8-ஆவது இடத்துடன்) விடைபெற்றது தமிழ்நாடு அணி. தமிழ்நாடு அணியின் வெற்றியை ரசிகர்கள் மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர்.