லக்னோ, டிச.4- ஜாட் மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காவிட்டால், உ.பி. தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்போம் என்று அகில பாரதிய ஜாட் ஆரக்ஷண் சங்கா்ஷ் சமிதி தலைவா் யஷ்பால் மாலிக் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: “சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் போதெல்லாம் உத்தரப்பிரதேசத்தில் ஜாட் மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளிப்பது பல்வேறு தலைவா்களின் வாடிக்கையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் தேசிய அளவில் ஜாட் மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சோ்ப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போதுவரை அதனை அவர் நிறைவேற்றவில்லை. இந்த முறை உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு அந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு ஜாட் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வோம்.” இவ்வாறு மாலிக் கூறியுள்ளார்.