states

img

உ.பி.யில் பாஜக வெற்றிபெறுவது எளிதானது அல்ல!

லக்னோ, டிச.14- உத்தரப் பிரதேசத்தில் 2017-ஆம் ஆண்டு 312 இடங்கள் பாஜக-வுக்கு கிடைத்தது. ஆனால், 2022 தேர்தலில் அதுபோன்ற வெற்றி சாத்தியம் கிடையாது. மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக கடுமையாக போராட வேண்டும் என்று ஏபிபி - சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 2022 துவக்கத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் தற்போது பாஜக-வே ஆட்சியில் உள்ளது. இதனால், இந்த நான்கு மாநிலங்களையுமே எப்படியாவது தக்கவைத்து விட வேண்டும் என்ற நெருக்கடி பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெறக்கூடிய வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் முக்கியமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கடந்த ஒரு மாதமாக உ.பி. மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஏபிபி செய்தி நிறுவனமும், சிவோட்டரும் இணைந்து 3-ஆவது முறையாக கருத்துக் கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளன. அதில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும்; ஆனால், பிரம்மாண்ட வெற்றி அக்கட்சிக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளன. 403 இடங்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், பாஜக-வுக்கு 212 முதல் 224 இடங்கள் வரையே கிடைக்கும். 2017 தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 தொகுதிகளை பாஜக இழக்கும்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 151 முதல் 163 இடங்கள் வரை கிடைக்கும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 12 முதல் 24 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் அதிகபட்சம் 10 இடங்களும் கிடைக்கலாம் என்று ஏபிபி - சிவோட்டர் கணித்துள்ளது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை, பாஜக கூட்டணிக்கு 40.4 சதவிகிதம்; சமாஜ்வாதி கூட்டணிக்கு 33.6 சதவிகிதம்; பகுஜன் சமாஜ் கட்சிக்கு 13.2 சதவிகிதம், காங்கிரஸ் கட்சிக்கு 7.3 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், கொரோனா கால நெருக்கடிகள், சாதிய ரீதியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான அதிருப்தி, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், குறிப்பாக, மேற்கு உ.பி.யில் நடக்கும் மதமோதல்கள், லக்கிம்பூர் படுகொலைகள் பாஜக-வுக்கு சவாலாக மாறியிருக்கின்றன என்று ஏபிபி - சிவோட்டர் குறிப்பிட்டுள்ளது.