states

img

முடங்கியது ராஜஸ்தான் மாநில நிர்வாகம்

சமீபத்தில் நிறைவு பெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. உட்கட்சி மோதலால் நீண்ட இழுவைக்கு பிறகு அதாவது 10 நாட்களுக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முதல்வராக பதவியேற்று ஒருவாரத்தை தாண்டிய பின்பும் இன்னும் அமைச்சரவை அமைக்கப்படாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தின் துறை நடவடிக்கை, நிர்வாகத்தின் அடிப்படை செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளதால் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மக்களை ஏமாற்றும் பாஜக

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 22 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் ராஜஸ்தானில் அமைச்சரவையை அமைக்காமல் பாஜக மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தான் மக்கள் பாஜகவுக்கு தெளிவான ஆணையை வழங்கினர். ஆனால் தேர்தலுக்குப் பின் பாஜகவின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் ஏமாற்றம் பரவத் தொடங்கியுள்ளது. 22 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை என்பதால் மாநில ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது. அனைத்து துறைகளும் குழப்பமான நிலையில் சுழன்று வருவதால், அரசாங்கம் சுமூகமாக இயங்குவதற்கு விரைவில் அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.