states

img

கலவரம் காரணமாக ஜோத்பூரில் இணைய சேவை முடக்கம்  

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.  

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒலிபெருக்கி, கொடி ஆகியவை கட்டப்பட்டிருந்தது. அப்போது பரசுராம் ஜெயந்திக்காக மற்றொரு சமூகத்தினர் அதே பகுதியில் கொடி கட்ட முயன்றனர். இதனால் இருதரப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கலவரமாக மாறி ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர்.  

இதைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜஸ்தான் ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த தாக்குதலில் காவல் துறை ஆணையர் உள்பட 4 காவலர்கள் காயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் காயமடைந்தனர்.  

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதனால் ஜோத்பூர் பகுதி முழுவதும் இணைய சேவைகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.  

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜோத்பூர், மார்வாரின் அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் அதே வேளையில், அமைதியைப் பேணவும், சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் ஒத்துழைக்கவும் அனைத்து தரப்பினருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.    

ரம்ஜான் ஈத் பண்டிகையை முன்னிட்டு, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.