சரிஸ்கா தேசிய புலிகள் சரணாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் சுமார் 10 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது சரிஸ்கா தேசிய புலிகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் புலிகள் தவிர மற்ற வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனைதொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தீயை கட்டுப்படுத்த ராணுவத்தின் 2 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக நீர் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புலி நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து தீயினால் பாதிக்கப்பட்ட பகுதியின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.