மும்பை, நவ.20- மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜல்கான் - ஜமோத்தில் ஞாயிறன்று ஆதிவாசி மகளிர் தொழிலாளர் களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சட்டங்களை மேலும் பலப்படுத்துவதுடன் புதிய சட்டங்கள் இயற்றப்படும். பழங்குடியினர் நாட்டின் முதல் உரிமையாளர்கள். பிற குடி மக்களைப் போலவே அவர்களுக்கு சம உரிமைகள் உள்ளன. பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது. பழங்குடியினரின் நிலங்களை பறித்து தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க பிரதமர் விரும்புகிறார்” என குற்றம்சாட்டினார்.