புனேவில் சாலையில் நின்று கொண்டிருந்த ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓலா நிறுவனம் சார்பில் அண்மையில் இரண்டு எலக்ட்ரிக் மாடல் ஸ்கூட்டர்கள் எஸ் ஒன் மற்றும் எஸ் ஒன் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் முன்பதிவில் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் லோஹேகான் நகரில் சாலையில் நின்ற ஓலா எஸ் ஒன் ப்ரோ மின்சார ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. அடுத்த சிறிது நேரத்திலேயே வாகனத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக வெடித்து, தீப்பற்றிய இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது.
இதுதொடர்பாக ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தங்களது ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், காரணங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்று வேலூரில் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் தந்தையும், மகளும் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் எலக்ட்ரிக் பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.