states

img

நான் தலித் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் - பாஜக எம்பி பகிரங்க குற்றச்சாட்டு

நான் தலித் என்பதால் அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறேன் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். 
மகாராஷ்டிரா மாநிலத்தில் லதூர் தொகுதியில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் மக்களவை உறுப்பினர் சுதாகர் ஷ்ரங்கரே. இவர்  ஒன்றிய அரசின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 72 அடி உயர சிலை திறக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர்  உள்ளூர் நிர்வாகத்தை குறிவைத்து “நான் ஒரு தலித் என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறேன்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகராட்சியிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் நான் வேண்டுமென்றே அழைக்கப்படுவதில்லை. நான் எந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது?  நான் தலித் என்பதால் அவமானப்படுத்தப்பட்டேன். நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் என் பெயர் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக நான் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று நான் பேசுகிறேன். லத்தூரில் ஆக்சிஜன் ஆலையை கொண்டு வந்தேன். ஆனால், நான் டெல்லியில் இருந்தபோது இங்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த அவலம் எனக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிராவில் எல்லா இடங்களிலும் இந்த அவலம் நடக்கிறது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூற வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தும், நிகழ்ச்சிகளுக்கு என்னை நிர்வாகம் அழைக்கவில்லை. நான் தலித் என்பதால்தான் புறக்கணிக்கப்படுகிறேன்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்து 28 நாட்களில் பணியை முடித்துவிட்டோம். ஆனால் பல தடைகள் ஏற்பட்டன என்று பாஜகவின் மக்களவை உறுப்பினர் சுதாகர் ஷ்ரங்கரே  பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.