states

img

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் தலசாரி ஊராட்சியில் சிபிஎம் வெற்றி 60 ஆண்டுகளாக வென்று சாதனை

மகாராஷ்டிரா, பிப்.25- மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள தலசாரி நகர் ஊராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசாரி நகர் உள்ளாட்சித் தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் போயே, சுபாஷ் துமாடா ஆகிய இரு இளம் உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு நகராட்சி  உறுப்பினர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியின் தனிச்சிறப்பு என்னவெனில், 1962-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த முதல் உள்ளாட்சித் தேர்தல் முதல் தொடர்ந்து கடந்த 60 ஆண்டுகளாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலசாரி நகர் உள்ளாட்சியில் (முன்னாள் கிராம ஊராட்சி மற்றும் தலசாரி தாலுகா ஆகிய இரண்டிலும்) தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.  மேலும் 1978-ஆம் ஆண்டு முதல் இன்று வரை  தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் (2014-ஆம் ஆண்டு தவிர்த்து) பொறுப்பை வகித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றியையடுத்து  பேரணிநடைபெற்றது. பேரணி தலசாரியில் உள்ள கட்சி அலுவலகமான கோதாவரி ஷாம்ராவ் பருலேகர் பவனில் நிறைவடைந்தது. வெற்றி பெற்ற உறுப்பினர்களை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே, மாநிலச் செயலாளர்  பார்க்யா மங்காட், மாநிலக் குழு  உறுப்பினர் வினோத் நிகோல், எம்.எல்.ஏ. ஆகியோர் பாராட்டினர்.