பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌதம் நவ்லகாவுக்கு கௌதம் நவ்லகாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற போரில் மராத்திய பேஷ்வா படைகளை வெற்றிகொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித் மக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அப்போதைய மாநில பாஜக அரசு, சாதி வெறியர்களைக் கைது செய்யாமல், இவ்விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வரவர ராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, பாதிரியார் ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா உள்ளிட்ட 9 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு உட்பட பல பொய் வழக்குகளைப் பதிவு செய்தது. எல்கர் பரிஷத் மாநாட்டில், மேற்கண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆற்றிய உரைகள் காரணமாகவே, பீமா கோரேகானில் வன்முறை தூண்டிவிடப்பட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகளின் தொடர்பு உள்ளதாக கூறி வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பாதிரியார் ஸ்டான் சுவாமி தனது 83 வயதில் சிறையிலேயே 2021-ஆம் ஆண்டில் மரணமடைந்தார். சுதா பரத்வாஜூக்கு கடந்த 2021 டிசம்பரில் ஜாமீன் கிடைத்தது. கடந்த 82 வயதான கவிஞர் வரவர ராவிற்கு 2022 ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவக் காரணங்களுக்காக 6 மாத நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமூக செயல்பாட்டாளர்களான வெர்னான் கோன்சால்வ்ஸ் மற்றும் அருண் ஃபெரீரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்த கௌதம் நவ்லகா கடந்த 2022-ஆம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர், சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் அவருக்கு 2 முறை ஜாமீன் மறுத்த நிலையில், கௌதம் நவ்லகாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, இந்த உத்தரவை 6 வார காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தை வலியுறுத்தியது. இதற்கு மூன்று வாரங்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.