states

img

பள்ளி மதிய உணவில் முட்டை வழங்குவது மாணவர்களுக்குள் பாகுபாட்டை ஏற்படுத்துமாம்!

பெங்களூரு, ஜூலை 15 - மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதால், பள்ளி மதிய உணவில்  முட்டை வழங்குவது கூடாது என்று கர்நாடக  அரசு அமைத்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த ஆய்வுக்குழு (?) அறிக்கை அளித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையின் (National Education Policy) அமலாக்கம் தொடர்பாக மாநி லங்கள் பலவும் வல்லுநர் குழுக்களை அமைத்து  ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த வகை யில், மாநில அரசுகள் சார்பில் இதுவரை 800 முதல் 850 அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு மாநிலமும் 25 அறிக்கைகளைத் தயார் செய்துள்ள நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பாஜக  அரசு, மதன் கோபால் தலைமையில் 26 குழுக் களை அமைத்து அதனடிப்படையில் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த வகையில், தேசியக் கல்விக் கொள்கை யின் கீழ் பாடத்திட்டக் கட்டமைப்பு எவ்வாறு  இருக்க வேண்டும்; மாநிலப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் எத்தகையன வாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட வாரணாசி ஐஐடி பேராசிரியர் வி. ராமநாதன் தலைமையிலான குழு, அண்மை யில் தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதில், நியூட்டன் மற்றும் பிதாகரஸ் ஆகியோரின் கண்டு பிடிப்புக்கள் என்று கூறப்படுபவை இந்தியாவில் வேதக் காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. கிரேக்கக் கணிதவியலுக்குப் பதிலாக, இந்தியா வில் தோன்றிய வேதக்கணிதத்தை மாணவர் களுக்கு கற்றுத்தர வேண்டும். எளிதில் நினைவு கூருவதற்கான எண் குறியீட்டைக் கொண்டது கடாபயாதி அமைப்பு ஆகும். அந்த வகையில்,  மனுஸ்மிருதி மற்றும்  பூதசங்கியா, கடாபயாதி சங்கியா போன்ற புராதன எண் முறைகளை மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாண வர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.

மேலும், “ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ள நாட்டில், குறைந்தது மூன்று மொழி களாவது கற்பிக்கப்பட வேண்டும். அதாவது,  மாநில மொழியுடன் இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவதாக பாரதிய மொழி களில் ஒன்றும் கற்பிக்கப்பட வேண்டும். அந்த  மூன்றாவது பாரதிய மொழியில், சமஸ்கிரு தத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். சமஸ்கிரு தம் என்பது பெரும்பான்மையாக இந்திய அறிவைக் கொண்டிருக்கும் மொழியாகும்” என்றும் குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, டாக்டர் சாகர் தலை மையிலான “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு” குறித்த அறிக்கையையும் கர்நாடக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி மாண வர்களுக்கான மதிய உணவில் இறைச்சி மற்றும்  முட்டை வழங்குவது கூடாது; தொடர்ச்சியாக முட்டை மற்றும் இறைச்சியை எடுத்துக்  கொண்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்று பயமுறுத்தப்பட்டுள்ளது.  “ஒரே வகுப்பு மாணவர்களுக்கு வெவ்வேறு உணவுகளை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். அதாவது ஒரு தரப்பினருக்கு முட்டையையும் மற்றொரு தரப்பிற்கு வாழைப்பழம் போன்றவற்றையும் கொடுத்தால் அது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கிறது. மேலும், இது குழந்தைகளுக்கு இடையே உளவியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவது மற்றும் எந்த பாகுபாடும் இல்லாமல் நடத்துவதுதான் இந்தியாவின் தர்மம் ஆகும். எனவே, சாத்விக் உணவுகளான நிலக்கடலை, எள் லட்டு, வெல்லம் போன்ற இயற்கை உணவுகளை அளிப்பதன் மூலம் முறையான வளர்ச்சி மற்றும் ரத்த சோகையைப் போக்க முடியும்” என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

“குறைந்த கொழுப்பு மற்றும் பூஜ்ஜிய டிரான்ஸ்-பேட் கொண்ட உணவே அதிகப்படி யான ஊட்டச்சத்துக்குத் தேவைப்படுகிறது. எனவே, மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, சுவையூட்டப்பட்ட பால், பிஸ்கட்டை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் நீரிழிவு, மாதவிடாய் சிக்கல், மலட்டுத்தன்மை அதிகரித்து வருவ தால் இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் விலங்குகள் சார்ந்த உணவுகள் மனிதர்களின் ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிடுவதாகத் தெரிவிக்கின்றன. அதேபோல பீம் மற்றும் ஹனுமான் உணவுப்  பழக்கம் பற்றிய கதைகள் மூலம் குழந்தை களுக்குச் சரியான உணவையும் வீரம், தைரியம்  மற்றும் வெற்றியையும் இணைக்க உதவும்” என்று டாக்டர் சாகர் தலைமையிலான கமிட்டி தெரிவித்துள்ளது. இவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் மருத்து வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு பெரிய சிக்கலாக இருக்கும் சூழலில், முட்டையை மதிய உணவுத் திட்டத்தில் இருந்து விலக்கிக் கொண்டால் அது ஊட்டச்சத்து பகிர்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே முட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பள்ளி மாணவர்களுக்கு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் குறித்து வைக்கப்பட்டிருந்த பாடங்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான கே.பி. ஹெட்கேவார் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோர் பற்றிய பாடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் கர்நாடக அரசு சேர்த்தது. இதுதொடர்பாக அண்மையில் கேள்விகள் எழுந்தபோது,”சில சித்தாந்தங்கள் காரணமாக பல உண்மைகள் மற்றும் தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘இந்து இனப்படுகொலைகள்’ நடந்துள்ளன, எனவே உண்மைகள் வெளிவர வேண்டும்” என்று கல்வியைக் காவி மயமாக்கும் பாஜக அரசின் திட்டத்தை மதன் கோபால் வெளிப்படுத்தினார்.