states

கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு!

பெங்களூரு, அக். 14 - பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் வன்கொடுமைப் புகாரின் பேரில் கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார்.  அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வழக்கில், மடத்தில் சமையல் வேலை செய்துவந்த பெண்ணின் இரண்டு மகள்களை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருக ராஜேந்திர மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு ஆவார். இவர் நடத்தி வரும் மடத்தின் பள்ளி யில் படித்து வரும் இரு மாணவிகள் சிவமூர்த்தி  முருகா சரணரு மீது கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிவமூர்த்தி முருகா சரணரு, மடத்தின் வார்டன் ரஷ்மி,  பசவதித்தியா, பரமசிவன், கங்காதரைய்யா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தலித் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அப்போது, “மடாதிபதி சிவமூர்த்தி முருகா  சரணரு, தவறான வழக்கில் சிக்க வைக்கப் பட்டிருக்கிறார்” என்று பாஜக முன்னாள் முதல்வர்  பி.எஸ். எடியூரப்பா பகிரங்கமாக மடாதிபதிக்கு  ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே, மேலும் இரு சிறுமிகளை பாலியல் கொடுமை செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.