states

img

ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு மாதர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 18- மூடப்பட்டுள்ள ரேஷன் கடை கள் முழுவதையும் திறந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மாதர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 15ஆவது மாநாடு முல்லை நகரில் வி.சந்திரா நினைவரங்கில் சனிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்றது. பிரதேச தலைவர் இளவரசி, நிர்வாகிகள் முனியம்மாள், சிவசங்கரி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டு கொடியை பிரதேசக்குழு உறுப்பினர் பெரியநாயகி ஏற்றினார். சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தரராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி மற்றும் பிற சங்கங்களின் நிர்வாகிகள் டாக்டர் ஷீத்தல்நாயக், சரளா, விஜயா, கோட்டக்குப்பம் பகுதி கவுன்சிலர் பர்கத்சுல்தனா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.செயலாளர் ஈ.சத்தியா வேலை அறிக்கையையும், பொருளாளர் டி.கலையரசி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

தீர்மானம்
புதுச்சேரியில் ஆண்டுகணக்கில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து, கேரளா, தமிழ்நாடு போல் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட 14 அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதுச்சேரி அரசு பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும், புதுச்சேரியில் மேலும் மதுபான தொழிற்சாலைகளை திறக்க அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்
தலைவராக முனியம்மாள், செய லாளராக இளவரசி, பொருளாளராக கலையரசி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

;